வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 15 டிசம்பர் 2017 (19:06 IST)

விவாத மேடை வரை வந்த ஆளுநரின் குளியலறை மேட்டர்: ஆய்வா? அத்து மீறலா?

கடலூரில் இன்று ஆய்வு மேற்கொள்ள சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கீற்று தடுப்பை தாண்டி இளம்பெண் ஒருவர் குளிப்பதை பார்த்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்த விவகாரம் தற்போது தொலைக்காட்சியில் விவாதம் செய்யும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது.
 
நன்றி: Sun News
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சில நாட்களுக்கு முன்னர் கோவையில் ஆய்வு மேற்கொண்டார். இவரது இந்த செயல் சட்டத்தை மீறிய செயல் என அனைத்து கட்சியினரும் குற்றம் சாட்டினர். கடுமையான கண்டனத்தையும் பதிவு செய்தனர். ஆனால் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய ஆளும் கட்சியான அதிமுகவோ மௌனமாக இருந்தது.
 
இந்நிலையில் மீண்டும் தனது ஆய்வை கடலூரில் நடத்த உள்ளதாக அறிவித்தார். இது ஆளுநரின் அதிகாரத்துக்கு உட்படாத, சட்டத்தை மீறிய செயல் என திமுக எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு கடலூரில் கருப்புகொடி காட்டியது. ஆனாலும் ஆளுநர் தனது ஆய்வு திட்டத்தை மாற்றி கடலூரில் ஆய்வு செய்தார்.
 
இந்த ஆய்வின் போது அம்பேத்கர் நகரில் வீடுகளுக்கு முன்னால் இருக்கும் கீற்று தடுப்புகளை நீக்கி ஆய்வு செய்தார். அது அவர்களின் குளியலறை என ஆளுநருக்கு தெரியவில்லை. அப்போது ஒரு இளம்பெண் குளித்துக்கொண்டு இருந்ததை ஆளுநர் நேரில் பார்த்ததாக அந்த பெண் புகார் கூறியுள்ளார். இதனால் பொதுமக்கள் ஆளுநரை சூழ்ந்ததால் பரபரப்பு நிலவியது.
 
ஆய்வை முடித்துக்கொண்டு ஆளுநர் சென்னை திரும்பிக்கொண்டிருந்த போது அவரது பாதுகாப்பு கார் மாமல்லபுரம் அருகே வேகமாக சென்றபோது சாலையை கடக்க முயன்றவர்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு பேர் பலியாகினர், ஒரு பெண் படுகாயமடைந்தார்.
 
இந்நிலையில் ஆளுநரின் இந்த ஆய்வும் அவர் இளம்பெண் குளித்ததை பார்த்ததும் பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் விவாதிக்கப்பட உள்ளது. ஆளுநர் செய்வது ஆய்வா? இல்லை அத்து மீறலா? என விவாதிக்க உள்ளனர். இந்த விவகாரம் தொலைக்காட்சியில் விவாதிக்கம் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது.