1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (12:32 IST)

உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களின் செலவை அரசு ஏற்கும் - முதல்வர்

உக்ரைனிலிருந்து தாய்நாடு திரும்புவதற்கு ஏற்படும் பயணச் செலவுகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ளும் என அறிவிப்பு.

 
உக்ரைன் எல்லையில் ராணுவத்தை குவித்து வந்த ரஷ்யா தற்போது அதிகாரப்பூர்வமாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்ய ராணுவம் குண்டு மழை பொழிந்து வரும் நிலையில், உக்ரைன் நகரங்களுக்கு ரஷ்ய ராணுவ வீரர்கள் நுழைந்துள்ளனர். இன்று இரண்டாவது நாளாக போர் தொடங்கியுள்ளது. 
 
இந்நிலையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் 20,000 பேர் உக்ரைனில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளை படித்து வருகின்றனர். இவர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே 5,000 பேர் உள்ளனர். இதனிடையே உக்ரைன் தனது வான் எல்லையை மூடியது. இதனால், இந்தியர்களை மீட்க சென்ற இந்திய சிறப்பு விமானங்கள் திரும்பி வந்து விட்டன. தற்போது போர் தீவிரமாகி வருவதால், இவர்களால் நாடு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 
 
உக்ரைனில் வசிக்கும் இந்தியர்களை அருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு சென்று பாதுகாப்பாக தங்கும்படி இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. அதோடு இன்று காலை 10 மணி வரை தமிழ்நாட்டை சார்ந்த 916 மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தோர் தமிழ்நாடு அரசை தொடர்பு அலுவலர்கள் வாயிலாகத் தொடர்பு கொண்டுள்ளனர். 
 
இந்தச் சூழ்நிலையில் தமிழ்நாட்டை சார்ந்த மாணவர்கள் உக்ரைனிலிருந்து தாய்நாடு திரும்புவதற்கு ஏற்படும் பயணச் செலவுகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ளும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.