1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Updated : திங்கள், 18 ஜூலை 2016 (18:13 IST)

செல்பி எடுத்த போது ராட்சத அலையில் சிக்கி கணவன் மனைவி பலி

செல்பி எடுத்த போது ராட்சத அலையில் சிக்கி கணவன் மனைவி பலி

நாகர்கோவில் அருகே கடற்கரையில் செல்போனில் ‘செல்பி’ எடுத்த கணவன் மனைவியை ராட்சத அலை இழுத்து சென்றதில் இருவரும் பலியாகியுள்ளனர்.


 
திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்தவர் உமர் ஷெரீப் (42) சிப்ஸ் கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி பாத்திமா பீவி (40) மதரசா பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். உமர் ஷெரீப்பின் நண்பர் ஜாபர் சாதிக் (45). பனியன் கடை நடத்தி வருகிறார். உமர் ஷெரீப், ஜாபர் சாதிக் ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் ஒரு காரில் குமரி மாவட்டத்துக்கு சுற்றுலா வந்தனர். இந்நிலையில், நேற்று மதியம் நாகர்கோவில் அருகே உள்ள சங்குத்துறை கடற்கரை வந்தனர், அங்கு உமர் ஷெரீப்பும், பாத்திமா பீவியும் கடலில் கால்களை நனைத்தபடி தங்கள் செல்போனில் ‘செல்பி’ எடுத்தனர். அப்போது வந்த ராட்சத அலை பாத்திமா பீவியை கடலுக்குள் இழுத்து சென்றது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உமர் ஷெரீப், மனைவியை காப்பாற்ற முயன்ற போது அவரையும் கடல் அலை இழுத்து சென்றது. இதனால் கரையில் இருந்த அவர்களின் மகள்கள் அலறியடித்துக்கொண்டு பெற்றோரை காப்பாற்ற கடலுக்குள் ஓடினர். அப்போது மீண்டும் பெரிய அலை வந்ததால் உடனே ஜாபர் சாதிக், நண்பரின் மகள்களை காப்பாற்றி கரைக்கு கொண்டு சென்றார். அதற்குள் உமர் ஷெரீப், பாத்திமா பீவி ஆகியோரை கடல் அலை இழுத்து சென்று விட்டது. இதைகண்ட கடற்கரை கிராமத்தை சேர்ந்தவர்கள் கடலில் இறங்கி, கணவன் மனைவி இருவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து வரவழைக்கப்பட்டது. மருத்துவ குழுவினர் பரிசோதித்து பார்த்து விட்டு உமர் ஷெரீப், பாத்திமா பீவி ஆகியோர் இறந்து விட்டதாக கூறினர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.