1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 22 மே 2024 (18:44 IST)

அரசுப் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவசப் பயணம்..! நடைமுறைப்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்..!

Annamalai
அரசுப் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவச பயணம் என்ற அறிவிப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
 
நாகர்கோயிலில் இருந்து தூத்துக்குடி சென்ற அரசு பேருந்தில் காவலர் ஆறுமுகப்பாண்டி பயணச்சீட்டு எடுக்க மறுத்து நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த காவல் துறை உத்தரவிட்டுள்ளது. 
 
இந்நிலையில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், கடந்த 2021 - 2022 ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில், பணி செய்யும் மாவட்டத்துக்குள் பேருந்துகளில் காவலருக்கு இலவசப் பயணம் என்று, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், காவலர் ஆறுமுகப்பாண்டியை, இதுபோன்று துன்புறுத்துவது எந்த விதத்தில் நியாயம்? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
 
முதல்வரின் இந்த மானியக் கோரிக்கை அறிவிப்பு, மூன்று ஆண்டுகள் கடந்தும், போக்குவரத்துக் கழகங்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்பது ஆச்சரியத்தை அளிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
 
உடனடியாக இந்த அறிவிப்பு குறித்து, அனைத்து மாவட்டப் போக்குவரத்துக் கழகங்களுக்கும் தெரியப்படுத்துவதோடு, பணி செய்யும் மாவட்டங்களில், காவலர்களுக்கு இலவசப் பேருந்து பயணம் என்ற அறிவிப்பை தமிழகம் முழுவதும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

 
இந்தச் சம்பவத்துக்காக, காவலர் ஆறுமுகப்பாண்டி மீது துறை ரீதியான நடவடிக்கை உட்பட எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.