1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 15 நவம்பர் 2022 (08:21 IST)

மருத்துவர்கள் அலட்சியம்? காலை இழந்த கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு!

சென்னையில் அறுவை சிகிச்சைக்காக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட கால்பந்து வீராங்கனை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த வியாசர்பாடியை சேர்ந்த மாணவி ஒருவர் கால்பந்து வீராங்கனையாக இருந்துள்ளார். தேசிய அளவிலான போட்டிகள் உள்ளிட்ட பலவற்றில் கலந்து கொண்டு பல சாதனைகள் படைத்துள்ளார்.

சமீபத்தில் மாணவிக்கு காலில் தசைப்பிடிப்பால் சவ்வு விலகியிருப்பது தெரிய வந்துள்ளது. அவர் கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவருக்கு காலில் வலி குறையாமல் இருந்துள்ளது.

இதனால் அவர் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவரது காலில் சதை அழுகியிருப்பதாகவும் காலையே அகற்ற வேண்டும், இல்லையென்றால் உயிருக்கு ஆபத்து எனவும் கூறியுள்ளனர். இதனால் அவரது கால் அகற்றப்பட்டுள்ளது. சரியான சிகிச்சை அளிக்காததே மாணவி காலை இழக்க காரணம் என அவரது பெற்றோர்கள் முறையிட்டனர்.


இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாணவிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மாணவிக்கு செயற்கை கால்கள் பொருத்தவும், அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.

ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மருத்துவமனையில் போலீஸ் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit By Prasanth.K