செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 8 நவம்பர் 2019 (13:50 IST)

ஐடி ஊழியர்கள் குறைக்கப்பட காரணம் என்ன? – முன்னாள் தலைமை அதிகாரி விளக்கம்

இன்போசிஸ் நிறுவனம் தங்கள் ஊழியர்களில் பலரை பணி நீக்கம் செய்யப் போவதாக அறிவித்துள்ள நிலையில் இதுகுறித்து பல்வேறு விளக்கங்கள் கூறப்பட்டு வருகின்றன.

ஐடி நிறுவனங்கள் பல தங்கள் ஊழியர்கள் பலரை பணி நீக்கம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியானது. அதை தொடர்ந்து இன்ஃபோசிஸ் நிறுவனம் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்போவதை வெளிப்படையாகவே அறிவித்தது. நிறுவனத்துக்கு ஏற்படும் அதிக செலவினங்களை தவிர்ப்பதற்காகவே ஊழியர்களை குறைப்பதாக கூறப்பட்டது.

ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த ஐடி ஊழியர்கள் “திறமையற்ற மற்றும் தங்களை மேம்படுத்தி கொள்ளாத ஊழியர்களை ஐடி நிறுவனங்கள் வெளியேற்றுவது வாடிக்கைதான். ஆனால் அதற்கென ஒவ்வொரு ஐடி நிறுவனங்களும் சில சட்டத்திட்டங்கள் வைத்துள்ளன். சில ஐடி நிறுவனங்கள் பணி நீக்கம் செய்யப்படும் நபருக்கு மூன்று மாதங்கள் முன்பே தகவல் தெரிவித்து விடுவர். பணியை விட்டு போகும்போது மூன்று மாத சம்பளத்தை கூடுதலாக அளிப்பர். ஆனால் எல்லா ஐடி நிறுவனங்களும் இந்த முறையை பின்பற்றுவதில்லை. சில நிறுவனங்கள் காலையில் பணிக்கு செல்லும்போதுதான் பணிநீக்கம் செய்யப்பட்டதையே சொல்லி திரும்ப அனுப்புவார்கள்” என தெரிவித்துள்ளனர்.

கிட்டத்தட்ட இதே ரீதியான தகவல்களையே ஐடி நிறுவனங்களின் கண்ணோட்டத்தில் கூறியுள்ளார் முன்னாள் ஐடி நிறுவன தலைமை அதிகாரி ஒருவர். ஐடி நிறுவனத்தை பொறுத்தவரை ஊழியர்கள் தங்களை மேம்படுத்தி கொள்வது மிக முக்கியம். நாளுக்குநாள் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மேம்பாடு அடையாத ஊழியர்கள் மட்டுமே கணக்கிடப்பட்டு பணி நீக்கம் செய்யப்படுகின்றனர். மேலும் ஒரு நிறுவனத்தில் செலவுகள் அதிகரிக்கும்போது அதை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்க அந்தந்த நிறுவனங்களுக்கு உரிமை உண்டு என்று கூறியுள்ளார்.

ஐடி நிறுவன ஊழியர்களின் பணி நீக்கத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஐடி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். எனினும் மொத்தமாக ஆயிரக்கணக்கில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவது பொருளாதாரத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.