1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (17:19 IST)

205 கிமீ வேகத்தில் காற்று: தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை

தமிழகத்தை நோக்கி ஏப்ரல் 29 ஆம் தேதி புயல் ஒன்று வர இருப்பதாக சில தினங்களுக்கு முன் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதற்கு ஃபானி எனப் பெயரிடப்பட்டிருந்தது. 
 
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 25ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக இருப்பதாகவும் அது 27ஆம் தேதியில் இருந்து படிப்படியாக தமிழகத்தை நோக்கி நகரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. ஆனால் அதன் பின்னர் புயல் சென்னையில் கரையைக் கடக்காது என்றும் வட மேற்குப் பகுதியை நோக்கி நகருகிறது என்றும் அறிவிக்கப்பட்டது. 
 
இந்த புயல், சென்னை கடற்கரையிலிருந்து சுமார் 300 கிமீ தூரம் வரை வந்து பிறகு திசை மாறி, ஒடிசா கடற்கரை நோக்கி சென்று, வரும் 4 ஆம் தேதி ஒடிசாவில் கரையை கடக்கும் என கூறப்பட்டது.
காற்றின் வேகத்தை பொறுத்தவரையில், வடதமிழக கடற்கரை பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், சில சமயங்களில் 60 கிமீ வேகத்திலும் வீசும். மாலை நேரங்களில் 50 கிமீ வேகத்திலும், சமயங்களில் 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். 
 
குறிப்பாக புயல் தாக்கத்தால், இன்று முதல் சென்னை உட்பட வட தமிழகத்தில், மணிக்கு 70 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. 
 
ஆனால் தற்போது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அதிதீவிர புயலாக மாறியுள்ள ஃபானி ஒடிஷாவின் கோபால்பூர் - சந்த்பாலி இடையே கரையை கடக்கும். மே 3 ஆம் தேதி புயல் கரையை கடக்கும்போது 175 - 185 கிமீ காற்றின் வேகமாக இருக்கும். அதிகபட்சமாக 205 கிமீ வேகத்தில் காற்று விசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.