1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 19 அக்டோபர் 2019 (14:25 IST)

கருக்கலைப்பில் ஈடுபட்ட போலி டாக்டர்; மீண்டும் நான்காவது முறையாக கைது!

திருவண்ணாமலையில் கருக்கலை வேலையை தொடர்ந்து செய்து வரும் போலி டாக்டர் ஆனந்தியை போலீஸார் மீண்டும் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலையில் ஸ்கேன் சென்டர் என வெளியே காட்டிக்கொண்டு ரகசியமாக பல பெண்களுக்கு கருக்கலைப்பு செய்து வந்தவர் போலி டாக்டர் ஆனந்தி. எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை பல பெண்களுக்கு கருக்கலைப்பு செய்துள்ளார்.

இதை கண்டுபிடித்த போலீஸார் 2015ம் ஆண்டு இவரை கைது செய்தனர். அவரிடமிருந்த கருக்கலைப்பு கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பிறகு 2016ல் ஜாமீனில் வெளிவந்த ஆனந்தி மீண்டும் யாருக்கும் தெரியாமல் கருக்கலைப்பு வேலையை செவ்வனே செய்து வந்துள்ளார். சென்னை மருத்துவ ஆணையின் தலைமையிலான அதிகாரிகள் ஆனந்தியை கைது செய்து சிறையிலடைத்தனர். பிறகு எப்படியோ ஜாமீன் வாங்கி கொண்டு வெளியே வந்த ஆனந்தி இரண்டு வருடங்களாக எந்தவித அடையாளமும் இன்றி இருந்துள்ளார்.

2018ம் ஆண்டு ஆனந்தி வேங்கிகால் பகுதியில் சொகுசு பங்களா ஒன்றை வாங்கி வாழ்ந்து வருவதாகவும், அதில் மீண்டும் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செயல்பாடுகளில் ஈடுப்பட்டுள்ளதாகவும் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. மீண்டும் பிடிப்பட்ட ஆனந்தியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க திருவண்ணாமலை ஆட்சியர் உத்தரவிட்டார். அவரோடு சம்பந்தப்பட்ட கருக்கலைப்பு ஏஜெண்டுகள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

சில மாதங்கள் முன்பு நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த ஆனந்தி மீண்டும் கருக்கலைப்பில் ஈடுப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல்கள் கிடைத்ததால் மீண்டும் நான்காவது முறையாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ஆனந்தி.