வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 12 மார்ச் 2019 (08:56 IST)

மதுரைத் தேர்தல் ஒத்திவைப்பு – விரிவான அறிக்கை கேட்கும் தேர்தல் ஆணையம் !

மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவை முன்னிட்டு தேர்தலை தள்ளி வைக்கவேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில் அதுதொடர்பான விரிவான விளக்கத்தைக் கேட்டுள்ளது தலைமைத் தேர்தல் ஆணையம்.

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 18 முதல் மே 21 வரை 7 கட்டமாக நடக்க இருக்கிறது. அதில் முதல் கட்டமாக தமிழகத்திற்கு ஏப்ரல் 18 ஆம் தேதி தேர்தல் தொடங்க இருக்கிறது. அன்றைய தினம் மதுரையில் சித்திரை தேரோட்டம் நடைபெறவிருப்பதால் மதுரையில் மட்டும் தேர்தலைத் தள்ளிவைக்கக் கோரிக்கை வலுத்துவருகிறது. இது சம்மந்தமாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டு இன்று விசாரணைக்கு வர இருக்கிறது.

இது சம்மந்தமாக அனைத்துக் கட்சி கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் தினமான வரும் ஏப்ரல் 19ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இதற்கு முந்தைய தினமான ஏப்ரல் 18 வாக்குப் பதிவு என்பதால் தேர்தலுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது. இருப்பினும், அதுகுறித்து விரிவான விளக்கத்தை உடனடியாக சமர்ப்பிக்க கோரப்பட்டுள்ளது. இந்த விளக்கம் தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அதைத்தொடர்ந்து, தேர்தல் தேதி மாற்றம் குறித்து ஆணையமே முடிவு செய்யும்’ எனக் கூறினார்.

இதனால் மதுரையில் தேர்தல் ஒத்திவைக்கப்படுமா அல்லது குறிப்பிட்ட தேதியில் நடக்குமா என்பது விரைவில் தெரியவரும்.