1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (11:43 IST)

மதுபோதையில் ரோட்டில் கிடந்த பள்ளி மாணவிகள்! – கரூரில் பரபரப்பு!

School
கரூரில் மது அருந்திய பள்ளி மாணவிகள் ரோட்டில் மயங்கி கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூரில் உள்ள அரசு பள்ளியில் மாணவிகள் 3 பேர் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளனர். அவர்கள் முன்னதாக நடந்த பொதுத்தேர்வில் தோல்வியடைந்த நிலையில் மறுதேர்வு எழுத வேறு ஒரு பள்ளிக்கு சீருடையில் சென்றதாக கூறப்படுகிறது.

தேர்வு எழுதி முடித்ததும் மதுபானக்கடைக்கு சென்ற மாணவிகள் அங்கு ஒயின் வாங்கி குடித்ததாக தெரிகிறது. பின்னர் வீடு திரும்பிய மாணவிகள் போதை தலைக்கேறியதால் கரூர் சர்ச் கார்னர் பகுதியில் நடுரோட்டிலேயே போதையில் கிடந்துள்ளனர்.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அவர்கள் உடல்நலமில்லாமல் இருப்பதாக நினைத்து ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர். அருகில் சென்று பார்த்தபோது அவர்கள் மது போதையில் இருப்பது தெரிய வந்துள்ளது. அதை தொடர்ந்து அவர்களை அங்குள்ள மகளிர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்துள்ளனர்.

பள்ளி மாணவிகள் மூவரும் ஒயின் குடித்தால் உடல் நிறம் வெள்ளையாக மாறும் என ஆசைப்பட்டு குடித்ததாக கூறியுள்ளனர். பின்னர் அவர்களின் பெற்றோரை அழைத்து மாணவிகளை அவர்களிடம் போலீஸார் ஒப்படைத்துள்ளனர். மது போதையில் மாணவிகள் நடுரோட்டில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.