1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (09:17 IST)

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை: திரும்ப பெற மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் கோரிக்கை..!

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதை திரும்ப பெற வேண்டும் என்று மருத்துவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
வாகனங்களில் ஊடகம், காவல்துறை, நீதித்துறை, வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் என்று ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்றும் மீறி ஓட்டினால் அபராதம் மற்றும்  சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் சென்னை போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 
இந்த நிலையில் இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்று மருத்துவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சென்னை காவல் ஆணையருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மருத்துவர்கள் சங்கத்தலைவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: 
 
மருத்துவர்கள் பணி மனித உயிரை காப்பாற்றும் ஒரு இன்றியமையாத பணி ஆகும். அவசர காலங்களில் மருத்துவ சிகிச்சைக்காக செல்லும் மருத்துவர்களை காவல்துறையினர் நிறுத்தி விசாரிப்பதால் தேவையற்ற காலதாமதம் ஏற்படும்.
 
இதனால், உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகள் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. சந்தேகப்படும் மருத்துவர்களை ஐடி கார்டை காட்ட சொல்லலாம். அனைத்து மருத்துவர்களையும் டாக்டர் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்பது மருத்துவர்களை அவமரியாதை செய்வதாகவும், உயிர் காக்கும் உன்னத பணியை தடுப்பதாகவும், மக்கள் உயிருடன் விளையாடுவதாகவும் மருத்துவர்கள் கருதுகிறார்கள். அதனால், அந்த சுற்றறிக்கையை உடனடியாக திருத்தம் செய்து, டாக்டர் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு விலக்களித்து, புதிய சுற்றறிக்கையை வெளியிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
 
இதேபோன்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், செயலாளர் ஆர். கிருஷ்ணகுமார், துணைத் தலைவர் எஸ்.அறிவழகன் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva