1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 13 அக்டோபர் 2023 (12:37 IST)

மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்- அண்ணாமலை

தங்கள் கட்சியினர் சம்பாதிப்பதற்காக, ஒரு தொழில் துறையையே சீர்குலைத்து, வெள்ளை வகையில் இருந்த தென்னை நார் தொழிலை ஆரஞ்சு வகைக்கு மாற்றி, ஒட்டு மொத்த தென்னை நார் தொழிலையே முடக்கிய திமுக, தற்போது தங்கள் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியிருப்பது, மக்கள் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’வெள்ளை வகையில் இருந்த தென்னை நார் தொழிலை, திமுக அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 10/11/2021 அன்று ஆரஞ்சு வகை பிரிவிற்கு மாற்றி அரசாணை பிறப்பித்திருந்தது. அதோடு மட்டுமல்லாமல், தென்னை நார் தொழில்துறைக்கு மட்டுமின்றி, தொழிலாளர், உற்பத்தியாளர் குடியிருப்பு பகுதிகளுக்கும் மின்சாரத்தைத் துண்டித்தது இந்த மக்கள் விரோத திமுக அரசு.

திமுக அரசின் இந்த நிலைப்பாட்டால்,  அன்னிய செலாவணி மற்றும் உள்நாட்டு உற்பத்தி, வேலை வாய்ப்பு மற்றும் தென்னை நார் பொருட்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல்,  மின்கட்டண மானியம் கிடைக்காமலும், அதிகப்படியான மின் கட்டண உயர்வாலும்,  தென்னை நார் தொழிற்சாலைகள் இயக்கம் பெரிதளவில் பாதிக்கப்பட்டது. உற்பத்தியாளர்கள் மற்றும், தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியது.

திமுகவின் இந்த மக்கள் விரோதச் செயல்பாட்டை, கடந்த செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி அன்று,  தமிழ் நாடு பிஜேபி வெளியிட்ட அறிக்கையில்  அம்பலப்படுத்தியிருந்தோம். மேலும், தேசிய கயிறு வாரியம்,  மற்றும் தென்னை நார் தொழில் நிறுவனங்கள், உற்பத்தியாளர்கள் சங்கங்கள், இந்த அரசாணைக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தவுடன், மத்திய அரசிடம் கோரிக்கை வைப்பது போல் நடித்த திமுக அரசு, தற்போது வேறு வழியின்றி,தென்னை நார் தொழிலை, மீண்டும் வெள்ளை வகைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தங்கள் கட்சியினர் சம்பாதிப்பதற்காக, ஒரு தொழில் துறையையே சீர்குலைத்து, வெள்ளை வகையில் இருந்த தென்னை நார் தொழிலை ஆரஞ்சு வகைக்கு மாற்றி, ஒட்டு மொத்த தென்னை நார் தொழிலையே முடக்கிய திமுக, தற்போது தங்கள் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியிருப்பது, மக்கள் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி. மீண்டும் இது போல மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று, அறிவாலயம் அரசைக் கேட்டுக் கொள்கிறேன் ‘’என்று தெரிவித்துள்ளார்.