1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 4 மார்ச் 2022 (13:34 IST)

கூட்டணிக்கு கொடுத்து தானே எடுத்துக் கொண்ட திமுக!? – அதிருப்தியான கட்சிகள்!

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பேரூராட்சி, நகராட்சி பகுதிகளிலும் திமுகவினர் வெற்றிபெற்று வருவது கூட்டணி கட்சிகளை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் அனைத்து மாநகராட்சிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. மேலும் பல பேரூராட்சி, நகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

இன்று மாநகராட்சிக்கான மேயர்கள், பேரூராட்சி, நகராட்சிகளுக்கான தலைவர்கள் பதவியேற்று வருகின்றனர். திமுகவுடன் விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்திருந்த நிலையில் சில நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளை திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியிருந்தது.

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பொ.மல்லாபுரம் பேரூராட்சி தலைவர் பதவி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அங்கு திமுக வேட்பாளர் வெற்றி பெற்று தலைவராகியுள்ளார். அதுபோல காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட ஸ்ரீபெரும்புதூரிலும், கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட புலியூர் பேரூராட்சி தலைவர் பதவியிலும் கூட திமுக கட்சியினர் தலைவர் பதவியை அடைந்துள்ளனர். இதனால் கூட்டணி கட்சிகள் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.