1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 8 ஜூலை 2020 (08:34 IST)

அன்புமணி ராமதாஸின் டாட்டூவைக் கலாய்த்த திமுக எம்பி – கடுப்பான பாமகவினர் புகார்!

பாமக நிறுவனர் ராமதாஸின் மகன் அன்புமணி ராமதாஸின் கையில் இருக்கும் டாட்டூவைக் கலாய்த்து திமுக எம்பி செந்தில்குமார் டிவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.

பாமகவின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் மருத்துவரும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் தனது கையில் அக்னி கலசத்தை டாட்டூவாக பதித்து அது சம்மந்தமான புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்திருந்தார். இந்த டாட்டூ சம்மந்தமாக அவரைப் பலரும் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். ஆனால் திமுக எம்பி செந்தில்குமாரின் ட்ரோல் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றது.

செந்தில்குமார் தனது டிவிட்டரில் ‘சின்ன வயசுல தடுப்பு ஊசி போட்டா சின்னதா ஒரு தழும்பு இருக்கும். இதே உங்க பெற்றோர் சின்ன வயசுல சாதி மறுப்பு, சமூக நீதி சொல்லி கொடுக்கவில்லை என்றால் இப்படி தான் ஒரு நாள் இவ்வளவு பெரிய தழும்பா கையில வரும். இந்த சமூக நோய்க்கு மருத்துவம் அவசியம் மருத்துவரே’ எனக் கூறியிருந்தார். இது பாமகவினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்த இப்போது எம்பி செந்தில்குமார் மேல் புகார் அளிக்க ஆரம்பித்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சாமிசெட்டிப்பட்டி பாமக மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரன், தர்மபுரி பி1 காவல்நிலையத்தில் செந்தில்குமார் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி புகார் அளித்துள்ளார்.