செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 14 ஜூலை 2016 (14:27 IST)

காலியாகும் தேமுதிக கூடாரம் : மேலும் 4 மாவட்ட செயலாளர்கள் திமுகவில் தஞ்சம்

ஏற்கனவே தேமுதிகவைச் சேர்ந்த 19 மாவட்ட  செயலாளர்கள் மற்ற கட்சிகளுக்கு தாவிவிட்ட நிலையில், மேலும் 4 மாவட்ட செயலாலர்கள் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 
சட்டசபை தேர்தலின் போது, கூட்டணி தொடர்பாக விஜயகாந்த் எடுத்த முடிவுக்கு எதிர்ப்புத்து தெரிவித்து, சந்திரகுமார், எஸ்.ஆர். பார்த்திபன் உட்பட சிலர் தேமுதிகவில் இருந்து வெளியேறி மக்கள் திமுக என்ற கட்சியை தொடங்கினர். அதன்பின் அவர்கள் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
 
சட்டசபை தேர்தல் முடிவு தேமுதிகவிற்கு எதிராக இருந்தது. கட்சியின் தலைவர் விஜயகாந்த், உளுந்தூர்பேட்டை தொகுதியில் டெபாசிட் இழந்தார். மேலும், தேமுதிக வேட்பாளர்கள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. 10 சதவீதமாக இருந்த தேமுதிகவின் ஓட்டு சதவீதம்,2 சதவீதமாக குறைந்தது.
 
இதற்கு விஜயாகந்தின் நடவடிக்கையும், தவறான கூட்டணி முடிவும்தான் காரணம் என்று குற்றம் சாட்டிய 19 மாவட்ட செயலாலர்கள் மற்றும் சில தேமுதிக நிர்வாகிகள் அதிமுக, திமுக கட்சிகளுக்கு சென்று விட்டனர். ஒருபக்கம் தேமுதிக தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் கட்சி நிர்வாகிகளை தங்கள் பக்கம் முயற்சியில்  சந்திரகுமார் இறங்கியுள்ளார். 15 ஆயிரத்திற்கும் அதிகமான தேமுதிக தொண்டர்கள், வருகிற 17ஆம் தேதி, திமுக பொருளாலர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறார்கள். இந்த நிகழ்ச்சி சேலத்தில் நடக்கவுள்ளது.
 
இதனால் விஜயகாந்த் கடும் கோபத்தில் இருக்கிறார். நிர்வாகிகளை அழைத்து கூட்டம் நடத்தியும் பெரிதாக பலன் இல்லை என்று தெரிகிறது. தே.மு.தி.க.வில் உள்ள முக்கிய நிர்வாகிகள் சிலர் அதிருப்தியாளர்களுடன் தொடர்பில் தொடர்ந்து இருந்து கொண்டு இருப்பதால் எப்போது யார் கட்சியை விட்டு விலகி செல்வார்கள் என்று யூகிக்க முடியாத நிலை உள்ளது. அவர்களை தக்க வைக்க விஜயகாந்த் பல வழிகளில் முயன்று வருகிறார்.
 
இந்நிலையில் மேலும் சில மாவட்ட செயலாளர்கள் திமுகவில் இணைய இருக்கிறார்கள். ஒரு சென்னை மாவட்ட செயலாளர், திருவெறும்பூர் முன்னாள் எம்.எல்.ஏ, வேலூர் முன்னாள் எம்.எல்.ஏ, மதுரை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ என நான்கு பேர் நேற்று முன் தினம் ரகசியமாக ஸ்டாலினை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
தேமுதிக நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறி வருவதால், விஜயகாந்திற்கு கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளர் என்றும், உள்ளாட்சி  தேர்தல் வர இருக்கும் நிலையில் இப்படி நடப்பது விஜயகாந்திற்கு கவலையை அளித்துள்ளதாகவும் செய்தி வெளியாகியிருக்கிறது.