1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (18:01 IST)

ஹெல்மெட் அணியாமல் பயணித்தாரா சுபஸ்ரீ? உயிரை பறித்தது எது?

சுபஸ்ரீ ஹெல்மெட் அணியாமல் பயணித்ததால் உயிரிழந்தார் என சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ள பேச்சுக்கு போலீஸ் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. 
 
சென்னை பள்ளிகரணையில் அதிமுக பிரமுகர் வைத்திருந்த பேனர் விழுந்ததில் இளம்பெண் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இளம்பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். நேற்று நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த விபத்து குறித்து, லாரி ஓட்டுநர் மனோஜ் என்பவரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் பேனர் வைத்த அதிமுக பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
அதோடு அந்த பேனரை அச்சிட்ட அச்சகத்திற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. சுபஸ்ரீயின் மரணத்தால் அரசியல் கட்சி தலைவர்கள் இனி பேனர் வைக்க கூடாது என தங்களது தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளனர்.
 
இதனிடையே சுபஸ்ரீ ஹெல்மெட் அணிந்து சென்றிருந்தால் அவர் உயிர் பிழைத்திருப்பார் என சமூக வலைத்தளங்களில் சிலர் குரல் எழுப்பிய நிலையில், சுபஸ்ரீ ஹெல்மெட் அணிந்து பயணித்தார், லாரி அவரின் உடல் மீது ஏறியதால் அவர் உயிரிழந்தார் என போலீஸார் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.