1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : புதன், 1 ஜூலை 2020 (21:33 IST)

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்...6 பேர் மீது கொலை வழக்கு பதிவு ! ரகுகணேஷ் கைது !

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தின் வணிகர்களான ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்திற்கு நாடெங்கிலும் இருந்து கண்டனங்கள் குவிந்ததை அடுத்து, மதுரை உயர் நீதிமன்றக் கிளை தாமாகவே இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது. பின்னர், தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில், நேற்று காவல்துறையினர் பதிந்த எஃப்.ஐ.ஆர் பதிவிற்கும் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் கடைக்கு முன்னிருந்த சிசிடிவியின் பதிவான காட்சிகளுக்கு முன்னுக்குப்பின் முரணாக இருப்பதாக மீடியாக்கள் பகிரங்கமாக செய்திகள் வெளியிட்டனர்.

இந்நிலையில், சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை விடிய விடிய போலீசார் லத்தியால் அடித்தனர் என நேரடி சாட்சி வாக்குமூலம் அளித்துள்ளார்


இதையடுத்து, மதுரை நீதிமன்றம்… சாத்தான் குளம் வியாபாரிகள் மரணம் தொடர்பாக உடனடியாக விசாரணையைத் தொடங்கலாம் டிஜிபி உத்தரவுக்காக காத்திருக்க வேண்டியதில்லை என தெரிவித்துள்ளது.

மேலும், முக்கிய சாட்சியம் அளித்த ரேவதிக்கும் அவரது குடும்பத்துக்கும் பாதுக்காப்பு அளித்து உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இன்று  சாத்தான் குளத்தில் உள்ள உயிரிழந்த ஜெயராஜின் வீட்டிலும் கடையிலும் நீதிமன்றத்தால் விசாரணைக்கு அமர்த்தப்பட்டுள்ள சிபிசிஐடி ஐஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, தரமான முறையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணைக்காக 10 முதல் 12 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காவல் நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரண வழக்கில் எஃப்.ஐ.ஆர் திருத்தி அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார். அத்துடன் கூடியவிரையில் முடிவு தெரியும் என கூறியிருந்தார்.

இந்நிலையில், தந்தை, மகன் இருவரின் மரணத்தில் சந்தேகம் வலுத்து வந்த நிலையில் 
சாத்தான்குளத்தில் தந்தை-மகன் மரண விவகாரத்தில் தொடர்புடைய காவல் உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  ரகு கணேஷ் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
ஏற்கனவே, காவலில் உயிரிழப்பு என்றிருந்ததை பிரிவு 302-ன் கீழ் கொலைவழக்காக பதிவு செய்துள்ளது சிபிசிஐடி.
 
இந்தச் சம்பவம் தொடர்பான 2 முதல் தகவல் அறிக்கைகளிலும் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
மேலும், மற்றொரு எஸ்.ஐ. பாலகிருஷ்ணனும் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகிறது. அத்துடன் போலீஸ்காரர்கள் முருகன், முத்துராஜ் உட்பட 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தந்தை, மகன்  உயிரிழந்த விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவோம் என சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.