1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 28 மே 2021 (20:01 IST)

ஊரடங்கு நீட்டிப்பு...நடமாடும் காய்கறி, பழங்கள் விற்பனை இயங்கும்- முதல்வர்

நடமாடும் காய்கறி, பழங்கள் விற்பனை தொடர்புடைய துறைகள் மூலம் தொடர்ந்து இயங்கும் என தமிழக அரசு கூறியுள்ளது.
 

கொரோனா வைரஸ்‌ நோய்த்‌ தொற்று பரவலைத்‌ தடுப்பதற்காக, மத்திய அரசின்‌ வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில்‌ 25-3-2020 முதல்‌ தேசிய பேரிடர்‌ மேலாண்மைச்‌ சட்டத்தின்கீழ்‌, ஊரடங்கு உத்தரவு குறிப்பிட்ட சில தளர்வுகளுடன்‌ அமலில்‌ இருந்து வருகிறது.

இந்நிலையில்‌, கடந்த 22-5-2021 அன்று அனைத்து சட்டமன்றக்‌ கட்சித்‌ தலைவர்களுடன்‌ நடத்திய ஆலோசனைக்‌ கூட்டத்தில்‌, சட்டமன்றக்‌ கட்சித்‌ தலைவர்கள்‌ தெரிவித்த கருத்துகளின்‌ அடிப்படையிலும்‌, முன்னதாக மருத்துவ வல்லுநர்கள்‌ மற்றும்‌ மக்கள்‌ பிரதிநிதிகளின்‌ கருத்துகளைக்‌ கேட்டறிந்தும்‌, ஆலோசனை மற்றும்‌ கருத்துகளைப்‌ பரிசீலித்தும்‌, கொரோனா பெருந்தொற்று நோய்ப்‌ பரவலைக்‌ கட்டுப்படுத்த, கடந்த 24-5-2021 முதல்‌ தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழ்நாட்டில்‌ நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இது இன்று மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்ஜு ஜூன் 7 ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில்,நடமாடும் காய்கறி, பழங்கள் விற்பனை தொடர்புடைய துறைகள் மூலம் தொடர்ந்து இயங்கும் என தமிழக அரசு கூறியுள்ளது.

மேலும், மளிகைப் பொருட்களை ஒவ்வொரு ஊர்களிலும் உள்ள மளிகைக் கடைக்காரர்களால் வாகனங்களிலோ தள்ளுவண்டிகளிலோ உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன், குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று  விநியோகிக்கவும், ஆன்லைன் வாயிலாக வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்த பொருட்களை குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று வழங்கவும் காலை முதல் மாலை 6 மணிவரை அனுமதி வழங்கப்படுகிறது.