1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (19:09 IST)

திமுக-வை சேர்ந்த 15 நபர்களுக்கு மேலும் 15 நாட்கள் காவல் நீட்டிப்பு- நீதிமன்றம் உத்தரவு

karur
கரூரில் வருமானவரி அதிகாரிகளை தாக்கிய வழக்கில் திமுக-வை சேர்ந்த 15 நபர்களுக்கு மீண்டும் 15 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து கரூர் நீதிமன்றம் உத்தரவு.
 
கடந்த மே மாதம் 26 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோரின் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையிட வந்தபோது.
 
அதிகாரிகளை தடுத்து நிறுத்தி, கார் கண்ணாடி உடைத்து தாக்குதல் நடத்திய வழக்கில் கரூர் மாநகராட்சி கவுன்சிலர் உட்பட  திமுக - வை சேர்ந்த இந்த 15 நபர்கள் கைது செய்து நீதிமன்ற காவலில் அனுப்பப்பட்ட நிலையில், கரூர் நீதிமன்றத்தில் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.
 
அதனை தொடர்ந்து வருமானவரித்துறை அதிகாரிகள் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்து தங்களை தாக்கி ஆவணங்களை பறித்து சென்றதாக முறையிட்டனர். மதுரை உயர்நீதிமன்றம் 15 நபர்களின் ஜாமீன் மனுவானது ரத்து செய்யப்பட்டு, இந்த வழக்கு சம்பந்தமாக கரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
 
இந்த நிலையில் கரூர் நீதிமன்றத்தில் ஆஜரான 15 நபர்களும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து கரூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்தனர்.
 
இந்த வழக்கானது கரூர் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் ராஜலிங்கம்  முன்னிலையில் விசாரணையில் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் கைது செய்யப்பட்டு 15 நாள் காவல் முடிவடைந்த நிலையில் திமுகவை சேர்ந்த 15 நபர்கள் நேரில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தபட்டுள்ளனர்.  
 
குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1 மற்றும் 2-ல் ஆஜர்ப்படுத்தப்பட்ட திமுகவினர் 15 பேருக்கும் வருகின்ற 28ஆம் தேதி வரை மீண்டும் 15 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்