செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2020 (12:01 IST)

கொரோனா வார்டிலிருந்து இரண்டு முறை எஸ்கேப் ஆன பாட்டி! - நள்ளிரவில் சேஸிங்!

சென்னையில் கொரோனா வார்டிலிருந்து ஆட்டோவில் தப்பிய பாட்டியை போலீஸார் உடனடியாக தேடி கண்டுபிடித்த சம்பவம் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் மூதாட்டி கஸ்தூரி. இவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால் கே.கே நகரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு திடீரென பாட்டி மாயமானதால் மருத்துவமனை நிர்வாகம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் இருந்து தப்பித்த பாட்டி ஆட்டோ ஒன்றில் நெய்வேலியில் உள்ள மகளை காண சென்றுள்ளார். ஆட்டோ ட்ரைவரின் மொபைல் எண்ணிலிருந்து மகளுக்கு போன் செய்து தான் வருவதையும் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் பதிவேட்டில் இருந்த கஸ்தூரி பாட்டியின் மகள் எண்ணுக்கு போலீஸார் போன் செய்து விசாரிக்கவும், மேற்படி ஆட்டோவில் கஸ்தூரி பாட்டி தப்பி சென்றது தெரிய வந்துள்ளது.

உடனடியாக ஆட்டோ டிரைவருக்கு போன் செய்து பேசிய போலீஸார் பாடியை திரும்பவும் சென்னை கொண்டு வர சொல்லியுள்ளனர். இதனால் திண்டிவனம் வரை சென்றிருந்த நிலையில் ஆட்டோவை மீண்டும் சென்னைக்கு திருப்பியுள்ளார் டிரைவர். இதில் உஷாரான பாட்டி எம்.ஜி.ஆர் மார்க்கெட் அருகே வந்த போது சாக்கு போக்கு சொல்லி அங்கிருந்து தப்பியுள்ளார்.

பிறகு மீண்டும் அந்த பாட்டியை தேடி கண்டுபிடித்த போலீசார் அவரது உயிருக்கு ஒன்றும் ஆகாது என அவருக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி ஒருவழியாக மீண்டும் மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் சென்னையில் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.