1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : சனி, 23 டிசம்பர் 2023 (17:28 IST)

நிவாரண நிதி கொடுக்க வந்த கே.எஸ்.அழகிரி.. சந்திக்க மறுத்தாரா முதல்வர் ஸ்டாலின்?

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முதல்வரை நேரில் சந்தித்து நிவாரண நிதி கொடுக்க வந்ததாகவும் ஆனால் அவரை சந்திக்க முதல்வர் மறுத்து விட்டதாகவும் ஒரு செய்தி பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

தமிழகத்தின் தலைமைச் செயலகத்திற்கு நேற்று 10 மணிக்கு காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கேஎஸ் அழகிரி முதலமைச்சரை சந்தித்து நிவாரண நிதி வழங்குவதற்காக வந்திருந்தார். அவருடன் கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும் வந்திருந்தனர்.

ஆனால் அப்போது முதல்வர் அங்கு இல்லை என்றும் தலைமைச் செயலகத்திற்கு நீங்கள் வந்திருக்கும் தகவலை முதல்வருக்கு தெரிவிக்கிறோம் என்றும் சிறிது நேரம் காத்திருங்கள் என்றும் கூறப்பட்டது. அழகிரி சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்த நிலையில் அவருக்கு எந்த விதமான பதிலும் தெரிவிக்கவில்லை.

இதனை அடுத்து முதலமைச்சர் இன்று தலைமைச் செயலகம் வர வாய்ப்பு இல்லை என்றும் முதலமைச்சர் அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரிகளிடம் காசோலையை வழங்கி விட்டு செல்லுங்கள் என்றும் கூறியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த கே.எஸ் அழகிரி, நிவாரண நிதிக்கான காசோலையை வழங்காமல் கோபத்துடன் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

Edited by Siva