1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 3 மே 2023 (10:39 IST)

சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

Train
சித்ரா பௌர்ணமி தினத்தில் திருவண்ணாமலைக்கு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்ல வருவார்கள் என்ற காரணத்தால் மூன்று சிறப்பு ரயில்களை இயக்க தென்னக ரயில்வே திட்டமிட்டுள்ளது. 
 
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு பௌர்ணமி தினத்தில் பக்தர்கள் குவிந்து வருவார்கள் என்பதும் குறிப்பாக கிரிவலம் செல்வார்கள் என்பதும் தெரிந்ததே. 
இந்த நிலையில் சித்ரா பௌர்ணமி நாளை நள்ளிரவு தொடங்கி மே ஐந்தாம் தேதி நள்ளிரவு முடிவடையும் நிலையில் சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சித்ரா பௌர்ணமியை ஒட்டி மூன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அந்த ரயில்கள் குறித்த விபரங்கள் பின் வருமாறு:
 
வேலூர் - திருவண்ணாமலை இடையே மே 4 மற்றும் 5-ம் தேதி -வேலூர் கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 9.50 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்படுகிறது. 
 
திருவண்ணாமலை - வேலூர் இடையே மே 5 மற்றும் 6 தேதி -திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு வேலூர் கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்தை காலை 5.35 மணிக்கு சென்றடைகிறது. 
 
விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே மே 5-ம் தேதி -விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 9.15 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டு திருவண்ணாமலை ரெயில் நிலையத்தை முற்பகல் 11 மணிக்கு வந்தடைகிறது. 
 
விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே மே 4 மற்றும் 5-ம் தேதி - விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 9.15 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டு திருவண்ணாமலை ரெயில் நிலையத்தை இரவு 10.45 மணிக்கு வந்தடைகிறது. 
 
திருவண்ணாமலை - விழுப்புரம் இடையே மே 5 மற்றும் 6-ம் தேதி -திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 3.30 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டு  விழுப்புரம் ரெயில் நிலையத்தை அதிகாலை 5 மணிக்கு சென்றடைகிறது. 
 
வேலூர் - திருவண்ணாமலை இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் சென்னை கடற்கரைக்கும், திருவண்ணாமலை (அதிகாலை 3.30 மணி) - விழுப்புரம் இடையே 4, 5, 6 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் தாம்பரம் வரை நீட்டிக்கப்படும், என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran