1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 29 மே 2023 (12:59 IST)

விஜய் டிவி நிகழ்ச்சியை பாராட்டிய முதல்வர் முக. ஸ்டாலின்

விஜய் தொலைக்காட்சி கடந்த 2013 ஆண்டு ‘தமிழ் பேச்சு எங்கள் மூச்சு’ என்ற நிகழ்ச்சியை மீண்டும் தொடங்கியது. தமிழகம் முழுவதும்  உள்ள தமிழ் மொழியில் சிறந்த சொற்பொழிவாளர்களை கண்டுபிடிக்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி ஒளிப்பரப்பானது.

தமிழகம் முழுவதிலும் உள்ள திறமையாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகின்றனர். இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக ஜி. ஞானசம்பந்தம், பர்வீன் சுல்தானா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த  நிகழ்ச்சியை இன்று முதல்வர் முக.ஸ்டாலின் பாராட்டியுள்ளார். இதுகுறித்து, அவர் தன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:

‘’சொற்களுக்கு உயிர் இருக்கிறது. இனமான - பகுத்தறிவு உணர்ச்சியைத் தட்டியெழுப்பும் வல்லமை கொண்டது பேச்சுக்கலை. அதனால்தான் #தமிழ்ப்பேச்சு_எங்கள்மூச்சு நிகழ்ச்சியை விஜய்டிவி தொடங்கும்போது, "பேச்சுக்கலை என்பது பழைய மூடநம்பிக்கைகளைப் பாடி, பிற்போக்குத்தனத்தைப் போற்றுவதற்குப் பயன்படக் கூடாது. நகைச்சுவை என்ற பெயரில் அடுத்தவரை மட்டம் தட்டுவதாக இருக்கக் கூடாது. பகுத்தறிவையும், அறவுணர்வையும் வளர்த்து, முற்போக்கான சமூகத்துக்கு வழிவகுப்பதுதான் சிறந்த பேச்சுக்கு இலக்கணம்! பயனற்றவற்றைத் தவிர்த்து, பகுத்தறிவை வளர்க்கும் நோக்கத்தை இந்த நிகழ்ச்சி பின்பற்றும் என்று நான் மனதார நம்புகிறேன்" என வாழ்த்தினேன்.

எனது நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும் வகையில் "இடஒதுக்கீடு எனது உரிமை" என்ற தலைப்பில் உரையாற்றிய திருமிகு தே.நர்மதா அவர்களின் உரை அமைந்திருந்தது. கருத்து செறிந்த அவரது உரை வீச்சில் நூற்றாண்டுகால இடைவெளியைச் சுட்டிக்காட்டிய அவரது சொற்களுக்கு உயிர் இருக்கிறது. என் திருவாரூர் மண் ஈன்றெடுத்த அவரை வாழ்த்துகிறேன்!

அனைவரும் சொல்வோம்’’ என்று தெரிவித்துள்ளார்.