1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 2 ஜூன் 2022 (13:41 IST)

தெர்மகோலை நம்பி தண்ணீரில் இறங்கிய மாணவன்! – சென்னையில் சோகம்!

drowning
சென்னை முகப்பேர் பகுதியில் தெர்மகோலை வைத்து கல்குவாரி குளத்தில் நீந்த முயன்ற மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் தேவா. இவர் வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று இவரது நண்பர்கள் சிக்கராயபுரம் கல்குவாரியில் உள்ள குளத்திற்கு குளிக்க சென்றுள்ளனர். இவரும் அவர்களுடன் சென்றுள்ளார்.

தேவா நீச்சல் தெரியாத காரணத்தால் தெர்மகோலை வைத்து நீந்த முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த முயற்சி பலனளிக்காத நிலையில் அவர் நீரில் மூழ்கியுள்ளார். நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியாத நிலையில் மாங்காடு போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக அங்கு விரைந்த பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் தேவாவை தேடினர். இன்று காலை வரை தொடர்ந்த தேடுதலில் இறுதியாக தேவா சடலாமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.