1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 13 டிசம்பர் 2018 (07:47 IST)

மாறி மாறிக் குறை சொல்லும் மத்திய மாநில அரசுகள் – கஜா நிவாரணம் எப்போது ?

கஜா புயல் சேத விவரங்கள் குறித்த அறிக்கை தாமதத்திற்கு மாநில அரசே காரணம் என மத்திய அரசு சென்னை உயர்நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது.

தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் கஜா புயலினால் கடுமையாக சேதமடந்துள்ளன. அங்குள்ள மக்கள் தங்கள், பயிர்கள், கால்நடைகள் ஆகியவற்றைப் புயலுக்குப் பலி கொடுத்து வாழ்வாதாரங்களை இழந்து வாடுகின்றனர்.

அந்த மக்களுக்கு இன்னும் நிவாரணம் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றனர். இதற்கு மத்திய அரசு போதுமான நிதி ஒதுக்காததே காரணம் என மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், புயல் பாதிப்புகளுக்கான பகுதிகளில் உள்ள மக்களுக்கு நிவாரணத் தொகையை உயர்த்தி உடனடியாக வழங்க வேண்டும், இந்தப் புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு மீதான விசாரணை நேற்று (டிசம்பர்12) நீதிபதிகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சம்மந்தப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர் சார்பில் வீடுகள் சேதம், இழப்பு மற்றும் பயிர் நாசம் குறித்து சரியான ஆவணங்களைத் தாக்கல் செய்யாதவர்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைக் கேட்ட நீதிபதிகள், ஆவணம் இல்லையென்றாலும் நிவாரணம் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதையடுத்து மத்திய அரசு வழக்கறிஞர்களிடம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் ‘ புயல் பாதிப்புக்கு மத்திய அரசு ஏன் இன்னும் முழுமையான உதவியினை வழங்கவில்லை எனக் கேட்டனர். அதற்குப் பதிலளித்த வழக்கறிஞர்கள் ‘சில சந்தேகங்களை தமிழக அரசிடம் கேட்டுள்ளதாகவும், அதற்கு இன்னும் பதில் வரவில்லை’ எனப் பதிலளித்தனர். இதற்குப் பதிலளித்த தமிழக வழக்கறிஞர் ’மத்திய குழுவின் சந்தேகங்கள் தொடர்பாக இன்றே விளக்கங்கள் அனுப்பப்படும்’ என  தெரிவித்துள்ளார்.

இதனால் வழக்கு விசாரணை டிசம்பர் 17 ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.