வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 28 ஜூலை 2024 (08:35 IST)

காவிரியில் வெள்ளப்பெருக்கு.! உயரும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்.! வெள்ள அபாய எச்சரிக்கை..!!

Mettur Dam
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 107 அடியை கடந்துள்ள நிலையில், காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி, கேஆர்எஸ் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.  அணைக்கு வரும் உபரிநீர் முழுவதும் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.23 லட்சம் கனஅடியில் இருந்து 1.34 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.69 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 8 மணிக்கு 99 அடியாக இருந்த நிலையில் இன்று 107 அடியாக உயர்ந்துள்ளது.

Okenakkal
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை நிலவரப்படி, நீர் வரத்து விநாடிக்கு 1.52 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் பரிசல் இயக்க மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை, 13வது நாளாக நீடிக்கிறது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் தொடக்கப் பள்ளி, ஊட்டமலை நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் 3 தனியார் மண்டபங்கள் என 6 இடங்களில் அவசரகால முகாம்கள் அமைக்கப்பட்டு, அங்கு மக்களை தங்கவைப்பதற்கான ஏற்பாடுகளை அலுவலர்கள் செய்துள்ளனர்.


மேலும், ஒகேனக்கல் முதல் நாகமரை வரையிலான பகுதிகளை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.