1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 19 டிசம்பர் 2021 (09:49 IST)

18 மணி நேர போராட்டம்: பெண்கள் மீது பாய்ந்தது வழக்கு!

ஸ்ரீபெரும்புதூர் அருகில் உள்ள சுங்குவார்சத்திரத்தில் போராட்டம் நடத்திய 22 பெண்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 
ஸ்ரீபெரும்புதூர் அருகில் உள்ள சுங்குவார்சத்திரத்தில் ஃபாக்ஸ்கான் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு சுமார் ஐயாயிரம் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் தொழிற்சாலையைச் சுற்றிலும் பல்வேறு இடங்களில் தங்கி பணியாற்றி வருகிறார்கள். அதில், 600 பேர் பூந்தமல்லி வெள்ளவேடு ஜமீன் கொரட்டூரில் உள்ள ஐஎம்ஐ என்ற விடுதியில் தங்கியுள்ளனர்.
 
இந்த விடுதியில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று வழங்கப்பட்ட உணவு தரமற்றதாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த உணவை உண்ட சுமார் 116 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இவர்களில் பலர் உடனடியாக குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். நான்கு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
 
இந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த 8 பெண்களின் நிலை மோசமடைந்ததாக நேற்று வாட்சப்பில் செய்திகள் பரவின. இதனை பலர் சமூக வலைதளங்களிலும் பரப்பினர். எனவே, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை இரவு 12 மணியளவில் திரண்ட சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 10 மணி நேரத்திற்கும் மேல் சாலை மறியல் நடைபெற்றதால், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
 
பின்னர் அமைச்சர்கள் சி.வி.கணேசன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் ஒரு மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். தனியார் ஆலை முன்பு 18 மணி நேரமாக தொடர்ந்த பெண் தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனிடையே போராட்டம் நடத்திய 22 பெண்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி போராட்டம் நடத்தியது, பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.