1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 4 செப்டம்பர் 2023 (18:00 IST)

"ஜி.எஸ்.டி மூலம் மாநிலங்களின் நிதி உரிமையை பறித்துவிட்டது பாஜக;- முதல்வர் மு.க. ஸ்டாலின்

அடுத்தாண்டு  மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சிகளும், கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதேசமயம்  கிராமங்கள், நகரங்கள், மாநகரங்களில் உள்ள தொண்டர்களுக்கு பாசறை, தேர்தல் பயிற்ச்சிக் கூட்டம் நடத்தி அவர்களை தேர்தலுக்கு தயார்படுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் பாஜக தலைமையிலான என்.டி.,ஏ கூட்டணிக்கு எதிராக  காங்கிரஸ், திமுக, திரிணாமுல், ஐக்கிய  ஜனதா தளம், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ள 'இந்தியா' கூட்டணி அடுத்தடுத்து ஆலோசனை நடத்தி வருகிறது.

இக்கூட்டணியில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுகவும் வரும் தேர்தலில் தமிழகத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், Speaking4India தொடர் வாயிலாக திமுக தலைவரும், முதலமைச்சருமான
 மு.க.ஸ்டாலின்  நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார்.

அதில்,

 "ஜி.எஸ்.டி மூலம் மாநிலங்களின் நிதி உரிமையை பறித்துவிட்டது பாஜக;

2014 முதல் கடந்த ஆண்டு வரை தமிழ்நாடு ஒன்றிய அரசுக்கு கொடுத்த வரி 5.16 இலட்சம் கோடி ரூபாய். ஆனால் திரும்ப பெற்றதோ 2.08 இலட்சம் கோடி ரூபாய் மட்டும்;

ஆனால் பாஜக ஆளும் ஒரு மாநிலம் கொடுத்த வரி 2.24 இலட்சம் கோடி ரூபாய், ஆனால் திரும்ப பெற்றது 9.04 இலட்சம் கோடி ரூபாய்;

தமிழ்நாட்டிற்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நிதியை ஒன்றிய பாஜக அரசு கொடுப்பதில்லை. தமிழ்நாட்டிற்கு முத்திரை பதிக்கும் திட்டம் என்று எதையும் தரவில்லை."

இந்தியாவிற்காகப் பேசுவோம்!

பன்முகத்தன்மை கொண்ட பண்பட்ட இந்தியாவை செதுக்குவோம். இந்தியாவைக் காப்போம்; அதற்காக முதலில் இந்தியாவிற்காகப் பேசுவோம். இனி இது M.K.STALIN குரலாக மட்டுமல்ல இந்தியாவின் குரலாக அமையும். எனது குரலை இந்தியாவின் குரலாக எல்லோரிடத்திலும் எடுத்துச் செல்லுங்கள். வெல்க இந்தியா! என்று தெரிவித்துள்ளார்.
-