1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 11 ஏப்ரல் 2017 (15:56 IST)

சசிகலாவிற்கு செக் வைத்த சிறை நிர்வாகம் - அதிர்ச்சியில் அமைச்சர்கள்

பெங்களூர் சிறையில் அடைபட்டிருக்கும் சசிகலாவை சந்திக்க செல்லும் பார்வையாளர்களை குறைக்கும் நடவடிக்கையில் சிறை நிர்வாகம் இறங்கியிருப்பதால் அவரை சந்திக்க செல்லும் தமிழக அமைச்சர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட சிறைத் தண்டனை பெற்றுள்ள சசிகலா தற்போது பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து பலரும் அவரை அடிக்கடி சிறைக்கு சென்று சந்தித்து பேசினர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பின், அதிமுக அமைச்சர்கள் பலரும் அவரை அடிக்கடி சென்று சந்தித்து பேசி வந்தனர்.
 
இந்த விவகாரத்தில், சிறை நிர்வாகம் அவருக்கு சலுகை அளிக்கப்படுவதாக அங்கு அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் முதல் பலரும் புகார் கூறி வந்தனர். தற்போது அதற்கு சிறை நிர்வாகம் செக் வைத்துள்ளது.  அதாவது, இனிமேல் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே அவரை சந்திக்க முடியும் என சிறை நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
 
இதுபற்றி கருத்து தெரிவித்த ஒரு சிறை அதிகாரி “ சசிகலா விஷயத்தில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை. தற்போது அவரை சந்திக்க விரும்பும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைக்க தொடங்கியுள்ளோம். எண்ணிக்கை அதிகரித்தால் உடனே அவர்களை திருப்பி அனுப்பி விட முடிவெடுத்துள்ளோம். இதில் அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களும் அடக்கம்” என கூறியுள்ளார்.
 
சிறைத்துறையின் இந்த நடவடிக்கை, சசிகலாவை அடிக்கடி சந்தித்து பேசி வந்த அமைச்சர்களிடையே அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.