1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 4 அக்டோபர் 2019 (12:52 IST)

தமிழக அரசு பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும்! – கூட்டணிக்கே கண்டிப்பு காட்டும் அன்புமணி!

பிரதமரின் வருகையையொட்டி சென்னை முதல் மகாபலிபுரம் வரை பேனர்கள் வைக்க தமிழக அரசு அனுமதி வாங்கியிருக்கும் நிலையில், ‘தமிழக அரசு பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும்’ என அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்த விவகாரத்திற்கு பிறகு அனைத்து கட்சிகளும் பேனர் இனிமேல் வைப்பதில்லை என அறிவித்தன. ஆளும்கட்சியான அதிமுகவும் பேனர் இனி வைப்பதில்லை என அறிவித்தது. அறிவிப்பு வெளியிட்டு ஒரு மாத காலம் கூட முடியாத சூழலில் பிரதமர் மோடி – சீன அதிபர் சந்திப்புக்கு பேனர்கள் வைக்க நீதிமன்றத்திடம் அனுமதி வாங்கியிருக்கிறது தமிழக அரசு. இது மக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த அன்புமணி “பேனர் கலாச்சாரத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதே பாமகவின் நிலைபாடு. பிரதமரின் வருகையையொட்டி அதிமுக சில இடங்களில் பேனர் வைக்க அனுமதி பெற்றிருக்கிறார்கள். ஆனாலும் தமிழக அரசு பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும்!” என தெரிவித்துள்ளார்.

ஆளுங்கட்சியுடன் கூட்டணியில் இருந்தாலுமே அதன் செயல்பாடுகளில் அன்புமணி கருத்து தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது.