வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 24 மார்ச் 2020 (10:48 IST)

144 தடையால் என்ன பயன்? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!

144 தடை சட்டத்தினால் நோய்ப்பரவலை தடுக்க உதவாது என தெரிவித்துள்ளார் அன்புமணி ராமதாஸ். 
 
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பல லட்சம் மக்கள் உலகம் முழுவதும் பாதித்துள்ள நிலையில் இந்தியாவிலும் கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் நாடு முழுவதும் 30 மாநிலங்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 471லிருந்து 492 ஆக உயர்ந்துள்ளது. இதில் 451 பேர் இந்தியர்கள் எனவும்,  41 பேர் வெளிநாட்டினர் எனவும்  சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. 
 
எனவே, நிலையை கட்டுக்குள் கொண்டு வர 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணியில் இருந்து 31 ஆம் தேதி வரை போடப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசின் இந்த நடவடிக்கை குறித்து எம்பி அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது... 
இன்றுமுதல் 31 ஆம் தேதி வரை 144 தடை ஆணை பிறப்பிக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். இது வரவேற்கத்தக்கது. ஆனாலும் பொது இடங்களில் மக்கள் கூடுவதை முழுமையாக தடுக்க அரசு வகை செய்யப்படாதது ஏமாற்றம் தருகிறது. 
 
கடந்த 4 நாட்களில் கொரோன நோய்ப்பரவல் 165% அதிகரித்திருக்கிறது. இது அச்சமளிக்கும் வேகம். அதனாலதான் நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொண்டு 19 மாநிலங்கள் ஊரடங்கை செயல்படுத்தி வருகின்றன. தமிழகத்திலும் மக்கள் எவரும் வெளியில் வராத வண்ணம் தடுத்தால் தான் கொரோனா நோயை தடுக்க முடியும்.
 
எனவே தமிழகத்திலும் முழுமையான ஊரடங்கை செயல்படுத்த வேண்டும். 144 தடை சட்டத்தினால் ஓரளவு மட்டும் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது நோய்ப்பரவலை தடுக்க உதவாது என தெரிவித்துள்ளார்.