1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 2 ஏப்ரல் 2018 (10:14 IST)

காவிரி விவகாரம் : அதிமுக எம்.பி. முத்துகருப்பன் ராஜினாமா

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.பி. முத்துகருப்பன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

 
உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. மேலும், 3 மாத கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரம் தமிழகமெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைக்கண்டித்து, அதிமுக எம்.பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. 
 
இந்நிலையில், அதிமுக எம்.பி.முத்துகருப்பன் இன்று டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது, தனது எம்.பி.பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். கர்நாடக தேர்தல் காரணமாக பாஜக அரசியல் செய்கிறது. ஆனால், தண்ணீர் கொடுப்பதில் அரசியல் செய்வது எனக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. எனது செல்போனை அணைத்து வைத்து விட்டேன். முதல்வர், துணை முதல்வர்கள் என்னை சமாதானம் செய்வார்கள். அதை நான் விரும்பவில்லை. அவர்களிடம் பிறகு பேசிக்கொள்கிறேன் என அவர் தெரிவித்தார். மேலும், அவர் தனது ராஜினாமா கடிதத்தை துணை ஜனாதிபதி வெங்கய நாயுடுவிடம் கொடுப்ப இருப்பதாக அவர் கூறினார்..
 
காவிரி விவகாரத்தில் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய தயார் என சில அதிமுக எம்.பி.க்கள் கூறிவந்தனர். முத்துகருப்பன் அதை முதலில் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.