1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 28 ஜூன் 2019 (18:12 IST)

தண்ணீர் என்று நினைத்து ஆசிடை குடித்தவர் பலி!!

சென்னையில் தண்ணீர் என்று நினைத்து, மதுவில் ஆசிட் கலந்து குடித்த தொழிலாளி பலி.

சென்னையில் ராயபுரம் அருகே உள்ள தண்டையார் பேட்டையை சேர்ந்தவர் குணசேகர். 42 வயதான இவர், ஸ்டீல் பட்டறையில் கூலித் தொழிலாளி ஆக வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். மேலும் குடிப்பழக்கமும் இருந்துள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் மது அருந்தும்போது, மதுவில் கலப்பதற்காக தண்ணீரை தேடியுள்ளார். அப்போது வீட்டின் ஒரு ஓரத்தில் இருந்த கழிவறையை கழுவும் ஆசிட் பாட்டிலை, தண்ணீர் என நினைத்து மதுவில் கலந்துள்ளார்.

பின்பு அதனை குடித்தபிறகு, வயிற்றில் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு குணசேகரின் மனைவி அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

ஆனால் சிகிச்சை பலன் இன்றி குணசேகர் பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது குடிபழக்கம் மக்களிடத்தில் அதிகமாகியுள்ள நிலையில், குணசேகர் தண்ணீருக்கு பதில் ஆசிடை மதுவில் கலந்து குடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.