வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 18 ஜூலை 2018 (16:15 IST)

8 வழி சாலை திட்டம்; விவசாயிகளை சந்தித்த சீமான் கைது!

சேலத்தில் 8 வழி சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து குரைகளை கேட்டறிந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. விவசாய நிகங்கள் குடியிருப்புகள் மற்றும் பள்ளிகள் இந்த சாலைக்காக கையகப்படுத்தப்படுவதால், அப்பகுதி மக்கள் கடுமையாக இத்திட்டத்தை எதிர்த்து வருகின்றனர்.
 
ஏற்கனவே சேலம் விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு எதிராக பேசிய சீமான் மீது ஓமலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, சேலம்  மாவட்ட நீதிமன்றத்தில் சீமான், ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம்,  சீமானுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.  இதன்படி,  சேலத்தில் ஒரு வாரமாக தங்கியுள்ள சீமான், தினமும் ஓமலூர் காவல் நிலையம் சென்று கையெழுத்திட்டு வருகிறார்.
 
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சேலம் மாவட்டம் கூமாங்காடு பகுதியில் வசிக்கும் மக்களைச் சந்தித்தார். அவருடன் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஜெகதீசபாண்டியன், மகளிர் பாசறை தலைவர் ஜானகியம்மாள் மற்றும் தொண்டர்கள் உட்பட பலர் அங்கு சென்றனர். அவர்களில் சீமானை மட்டும் போலீசார் அழைத்து சென்றனர்.
 
சீமான் முன் ஜாமீன் நிபந்தனைகளை மீறியதாக சீமானை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதியை இதுபோன்ற  காரணத்திற்காக காவல்துறை கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.