1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (12:19 IST)

4 தொகுதி.. 1 ராஜ்யசபா எம்.பி சீட்..! சிம்பிளாக கூட்டணி டீல் பேசும் தேமுதிக!?

premalatha vijayakanth
நாடாளுமன்ற கூட்டணி பேச்சுவார்த்தைகள் வேகம் எடுத்துள்ள நிலையில் தேமுதிக தெளிவாக திட்டமிட்டு செயல்பாட்டில் இறங்கி வருகிறது.



நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மாநில, தேசிய கட்சிகள் தேர்தல் கூட்டணி குறித்த தீவிரமான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. தமிழக அரசியல் சூழலை பொறுத்த வரை அதிமுக – பாஜக கூட்டணி பிளவுப்பட்டதால் ஒரு மும்முனை போட்டி நிலவும் சூழல் உள்ளது. திமுகவிற்கு விசிக, இடதுசாரி கட்சிகளின் ஆதரவு உள்ள நிலையில், தங்களுடன் மற்ற சிறிய கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள அதிமுக, பாஜக முனைப்புக் காட்டி வருகிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியில் தேமுதிக இருந்தது. ஆனால் தேமுதிக டிமாண்ட் செய்த தொகுதிகளோ, ராஜ்யசபா எம்பி சீட்டோ அவர்களுக்கு அளிக்கப்படவில்லை. ஆனால் பாமகவுக்கு ராஜ்யசபா எம்பி சீட் அளிக்கப்பட்டது. அதனால் அப்போதே கூட்டணியோடு தேமுதிகவிற்கு முரண்பாடு எழுந்தது. பின்னர் சில ஆண்டுகளில் தேமுதிக கூட்டணியில் இருந்து விலகியது.


தற்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு பின் கட்சியை நிலைநிறுத்துவதும், மேம்படுத்துவதும் அண்ணியார் பிரேமலதா விஜயகாந்த் பொறுப்பாக உள்ளது. இந்நிலையில் கடந்த முறை தர மறுத்த ராஜ்யசபா எம்பி சீட்டை இந்த முறை பெறுவதில் தேமுதிக உறுதியாக இருக்கிறது. எல்லாரும் கூட்டணிக்காக பெரிய கட்சிகளிடம் பேசி வரும் நிலையில், தேமுதிக 4 தொகுதிகள், 1 ராஜ்யசபா எம்.பி சீட் கொடுத்தால் அந்த கட்சியுடன் கூட்டணி வைக்க தயார் என்று சிம்பிளாக சொல்லிவிட்டதாம்.

பெரும்பாலும் 4 தொகுதிகள் தர அதிமுக, பாஜக கட்சிகள் சம்மதிக்காமல் போகலாம். தொகுதி ஒதுக்கீட்டில் கூடுதல் குறைகள் இருந்தாலும் 1 ராஜ்யசபா எம்.பி சீட் வேண்டும் என்பதில் தேமுதிக உறுதியாக உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது. பெரும்பாலும் தேமுதிகவின் கூட்டணி அதிமுக அல்லது பாஜகவுடன் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K