1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 9 ஜூன் 2023 (21:29 IST)

12 ஆம் தேதி பள்ளிகள் திறப்பை முன்னிட்டு, 1500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - அரசுப் போக்குவரத்துக் கழகம்

bus
கோடைவிடுமுறை முடிந்து, மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று  அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் ஒன்றாம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் ஜூன் ஏழாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருந்தார்

இந்த நிலையில் வெயிலின் தாக்கம் இன்னும் குறையாததால் தமிழக முதல்வரிடம் ஆலோசனை செய்து பள்ளிகள் திறப்பதை ஒத்திவைப்பது குறித்து  புதிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டது.

அதன்படி,  தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு தேதி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. அந்த அறிவிப்பின்படி 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12ம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டிற்கான கோடை விடுமுறைக்கு பின்வரும் 12 ஆம் தேதி பள்ளி திறப்பை முன்னிட்டும் வார இறுதி நாட்களை கருத்தில் கொண்டும், கூடுதலாக, 1500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

மேலும், பொதுமக்கள் இந்தச்  சிறப்பு பேருந்துகள் சேவையைப் பயன்படுத்திக் கொள்ள போக்குவரத்துக் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.