1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 18 ஜூலை 2021 (13:34 IST)

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல். 

 
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ள என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. தற்போது தமிழகத்தில் 21 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 
 
இதனிடையே தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, தேனி, ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், வடக்கு கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 
 
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.