வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உணவில் சக்கரவர்த்திக்கீரையை எடுத்துக்கொள்வதால் என்ன நன்மைகள்...?

கீரைகளில் எண்ணற்ற வகைகள் இருக்கின்றன. நமக்குப் பிடித்தமான கீரைகளை நாளுக்கொரு வகையாகப் பயன்படுத்தலாம்.


கீரைகளில் வைட்டமின் A, B, C  சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து ஆகியவைகளும் அதிகமாகக் கிடைக்கின்றன.
 
கீரையாகப் பயன்படுத்தப்படும் செடிகளுள் சக்கரவர்த்திக் கீரையும் ஒன்று. இந்த கீரைக்குக் கண்ணாடிக் கீரை, சக்கோலி, சில்லி என்ற வேறு பெயர்களும் உண்டு. 
 
இது விளை நிலங்களையொட்டி தானாக வளரக்கூடியது. தமிழகத்தில் சில பகுதிகளில் இதைப் பயிரிடவும் செய்கின்றனர். சக்கரவர்த்திக் கீரை செங்குத்தாக சுமார் மூன்றடி உயரம் வரை வளரும். இது பசுமை கலந்த செந்நிறத் தண்டுகளையும், கருஞ்சிவப்பு நிறத் தழைகளையும் உடையது.
 
சக்கரவர்த்திக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புக்களும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. இக்கீரையை நெய் விட்டு வதக்கிப் பருப்புடன் சேர்த்து உண்ணலாம். பருப்பும் தேங்காய்த் துருவலும் சேர்த்துப் பொரியலும் செய்யலாம். இதனைக் குழம்பாக வைத்தும் உண்ணலாம்.
 
இந்தக் கீரையுடன் புளி, மிளகாய் சேர்த்துக் கடைந்து சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். சூப் தயாரித்தும் பருகலாம். சக்கரவர்த்திக் கீரை நாவிற்குச் சுவையூட்டி பசியைத் தூண்ட வல்லது. 
 
சிறுநீர் கழிக்க முடியாமல் வயிறு உப்பி அவதிப்படுவோர் இந்தக் கீரையைப் பயன்படுத்தி குணம் பெறலாம். இது மலத்தை இளக்கும்.பருப்புடன் இக்கீரையைக் கடைந்து சாதத்ததுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர, உடலின் வெப்பந்தணிந்து உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். 
 
ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். பசியைத் தூண்டும். தாது விருத்தியைப் பெருக்கும். சோர்வை அகற்றும்.தாது விருத்திக்கு நிகரற்ற கீரை. இக்கீரை விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்யானது, குடலில் தோன்றும் கொக்கிப் புழு, நாக்குப் பூச்சி போன்ற குடல் ஒட்டுண்ணிகளை ஒழிக்க வல்லது.