1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

நெல்லிக்காயில் உள்ள சத்துக்களும் அதன் நன்மைகளும்...!!

வெயில் காலத்துக்கு, நெல்லிக்காய் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும் குணமுடையது என்பதால் ஜலதோஷத்தை உண்டாக்கிவிடும் என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள். உண்மையில் ஜலதோஷம் வராமல் நெல்லிக்காய்  தடுக்கும். இது தவிர வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்தும்.
நெல்லிக்காயில் வைட்டமின் சி மிக அதிகம். ஒரு சின்ன நெல்லிக்காயில் 600 மில்லி கிராம் வைட்டமின் சி இருக்கிறது. நம் நாட்டில் இரும்பு  சத்துக் குறைபாடு உடையவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். வைட்டமின் சி அதிகமாக நெல்லிக்காயில் இருப்பதால் காய்கறியில் இருக்கும்  இரும்புச் சத்தை ஈர்த்து உடலுக்குக் கொடுக்கும்.
 
தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்ற சாதங்கள் சாப்பிடும்போது வெறும் நெல்லிக்காயைத் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். இதன் மூலம்  அதில் இருக்கும் துவர்ப்புத் தெரியாது. நெல்லிக்காயை பச்சையாக சாப்பிடும்போதுதான் அதன் சத்துகள் முழுமையாகக் கிடைக்கிறது. ஒரு  நாளைக்கு இரண்டு அல்லது மூன்று நெல்லிக்காய் வரை சாப்பிடலாம்.
 
நெல்லிக்காயில் கால்சியம் சத்து நிறைய இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவைக்கும்.  ரத்த சோகைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து. நெல்லிக்காய் தலைமுடியைக் கருமையாக செழிப்பாக வளரவைக்கும் என்பதால்தான் கூந்தல்  வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய் வகைகளிலும் தலைச் சாயத் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.
 
தினமும் ஒரு நெல்லிக்காய் உண்டுவந்தால், சர்க்கரைக் குறைபாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம். அதிக உடல் பருமனால்  கஷ்டப்படுகிறவர்கள் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறுடன் இஞ்சிச் சாறு அருந்திவந்தால் தேவையற்ற எடை குறைந்து  சிக்கென்ற தோற்றத்தைப் பெறலாம்.
 
நெல்லிக்காயுடன் புதினா, இஞ்சி, எலுமிச்சை சேர்த்து பழரசமாக்கி அருந்தினால் வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். காயங்களைக்  குணப்படுத்தவும் புற்றுநோய் எதிர்ப்பு வல்லமையும் நெல்லிக்காய்க்கு உண்டு.
 
நெல்லிக்காயைத் துவையல் செய்தும் சாப்பிடலாம். சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் போன்றவற்றைச் சேர்த்து நெல்லிக்காய் உடன்  துவையல் செய்து சாப்பிட்டால், ரத்தத்தில் கொழுப்பின் அளவு சீராகும். கொழுப்பைக் கட்டுப்படுத்துவதால் இதய சம்பந்தமான நோய்கள்  வராமல் தடுப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. கண்களுக்கு மிகவும் நல்லது.