1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

நீரிழிவை கட்டுப்படுத்தும் அற்புத மருத்துவகுணம் கொண்ட கோவைக்காய்...!!

புதர்களிலும் வீணாக கிடக்கும் இடங்களிலும் தானாக வளரும் கோவைக்கொடியின் முழுத்தாவரமும் மருத்துவகுணம் கொண்டது. 


காய், கனிகள், இலைகள், தண்டு, வேர் போன்றவை மருத்துவ பயன் உடையவை. வெள்ளரிக்காய் குடும்பத்தை சேர்ந்த இந்த எளிமையான காய்கறி கொடியினத்தை சேர்ந்தது இந்தியாவில் எங்கும்  கிடைக்கும்.
 
கனிகள் செந்நிறமுடையவை. இவற்றை மென்றால் நாக்கில் உள்ள புண்கள் ஆறும். இலைகள், தண்டு, வேர் ஆகிய பாகங்களில் இருந்து பிழிந்து எடுக்கப்பட்ட சாறு உலோகப் பொருட்களோடு கலந்து நீரிழிவு நோய், வீங்கிய சுரப்பிகள், தோல்நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்த உதவும்.
 
கோவைக்காய் பழங்காலத்திலிருந்தே நீரிழிவு நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறிகளில் ஒன்று. தீவிரமில்லாத சர்க்கரை வியாதிக்கு கோவைக்காய் நல்ல பலனை அளிக்கும். பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 35 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.
 
கோவைக்காய் பச்சடி சிறந்த மருத்துவ குணமுள்ள உணவு. சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய கோவைக்காயுடன் மோர், மிளகுப்பொடி, சீரகப்பொடி, இஞ்சி சிறிது சேர்த்து தேவையான அளவு உப்பு கலந்து விட்டால் அவ்வளவுதான் கோவைக்காய் பச்சடி தயார். இதனை வாரம் இரண்டு நாள் பகல் உணவில் சேர்த்தால்  வாய்ப்புண் குணமாகும். 
 
பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டாலே வாய்ப்புண் ஆறிடும். வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவைக்காயை சேர்த்துக்கலாம்.  ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் பலன்கள் கிடைக்கும்.
 
இலை மற்றும் தண்டு கபத்தை வெளியேற்றும். வலி குறைக்கும். இலை, தண்டு, கஷாயம் மார்புச்சளி, சுவாசக்குழாய் அடைப்பு இவற்றிற்கு நல்ல மருந்தாகும். இலைகளை வெண்ணெய்யுடன் கலந்து புண்கள், பிற தோல்நோய்களை குணப்படுத்த உதவும்.
 
கோவைக்காய் பித்தம், ரத்தப் பெருக்கு, வாயு, வயிற்றில் உள்ள பூச்சி ஆகியவற்றுக்கெல்லாம் முடிவு கட்டும் நல்ல மருந்தாகும். கோவை இலைச் சாறு, பித்தம்,  ஷயம், மூல நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன்படும். கரம் மசாலா அல்லது உஷ்ணத்தைத் தரும் மருந்துகள் கோவைக்காயால் ஏற்படும் தீமைகளுக்கு நல்ல  மாற்றாகும்.