1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 29 ஜனவரி 2022 (10:45 IST)

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட மூலிகை கீழாநெல்லி !!

கீழாநெல்லி கீரை பொதுவாக நீர் நிறைந்த இடங்களில் தானாகவே வளரக்கூடியது. கீழாநெல்லியானது கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி என்றும் அழைக்கப்படுகிறது.


இது குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. நீர்நிலைகள், வயல் வரப்புகளில் வளரக்கூடியது. இதனுடைய இலைகள், புளியமரத்தின் இலைகளைப் போலவே சிறியதாகக் காணப்படும்.

இதன் இலைகளுக்குக் கீழே, பூக்களும் காய்களும் வளரும். இலைகளுக்குக் கீழே நெல்லிக்காய் போன்று இதன் காய்கள் இருப்பதால் இதை ‘கீழாநெல்லி’ என்று அழைக்கிறார்கள். இதேபோன்று இலைகளுக்கு மேலே காய் காணப்படும் மற்றொரு மூலிகைக்குப் பெயர் மேலாநெல்லி.

கீழாநெல்லி குளிர்ச்சித் தன்மை உடையது. மஞ்சள் காமாலையைக் குணப்படுத்த இக்கீரையைத் தவிர வேறு மருந்து கிடையாது. கீழாநெல்லிக்காய்களே ஆங்கில மருத்துவத்திலும் மஞ்சள் காமாலைக்குப் பயன்படுத்தப்படுகிறது.

கீழாநெல்லியின் இலைகளை அரைலிட்டர் தண்ணீரில் போட்டு காய்ச்சி, பின்பு வடிகட்டி அந்த தண்ணீரை மட்டும் குடித்து வந்தால் சீதபேதி உடனே நிற்கும்.

இரத்த சோகையால் உடல் வெளுத்துக் காணப்படுபவர்கள், மேகநோயால் பாதிக்கபட்டவர்கள் கீழாநெல்லியை நன்றாக அரைத்து பசுவின் தயிரில் கலந்து நாள்தோறும் காலையில் குடித்து வந்தால் நல்ல பலன் கிட்டும்

மஞ்சள் காமாலை நோயைச் சரிசெய்யும். மஞ்சள் காமாலைக்கு மிகச்சிறந்த மருந்து கீழாநெல்லி. கீழாநெல்லிக்கு சிறுநீரைப் பெருக்கும் சக்தி உண்டு. கீழாநெல்லி கண் சம்பந்தமான நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். கீழாநெல்லிக்கு தீராத தலைவலியைத் தீர்க்கும் வல்லமை உண்டு.

கீழாநெல்லி இலையை சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்களுக்கு  உப்புடன் சேர்த்து அரைத்துப் பூசினால் நல்ல பலன் கிட்டும். காயங்களுக்கு உப்பு சேர்க்காமல் வெறுமனே இக்கீரையை அரைத்து, பற்றுப் போல போட்டால் காயங்கள் விரைவில் ஆறும்.