வியாழன், 28 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

எங்கும் காணப்படும் சங்குப்பூவின் மருத்துவ நன்மைகளை அறிவோம்...!

சங்குப்பூ ஏறு கொடி வகையைச் சார்ந்தது. பச்சையான கூட்டிலைகளையும், பளிச்சிடும் நீல நிறமான மலர்களையும் உடையது. தட்டையான காய்களை உடையது. சங்குப்பூ இலை, வேர், மலர்கள், விதை ஆகியவை மருத்துவத்தில் பயன்படுபவை.
சங்குப்பூ இலைகள் துவர்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை, சிறுநீர் பெருக்கும்; குடல் புழுக்களைக் கொல்லும்; உடல் வெப்பத்தைத் தணிக்கும்; வாந்தி உண்டாக்கும்; பேதியைத் தூண்டும்; தலை நோய், கண் நோய்கள், மந்தம் ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும்.
 
சங்குப்பூ மலர்ச்சாறு, கல்லீரலை பலப்படுத்தும். தேமல் மற்றும் கரும்புள்ளிகளைக் குணமாக்கும். 
 
சங்குப்பூ வேர், சிறுநீர்ப்பை நோய்கள், மேகரணம், மாந்தம், காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். 
 
சங்குப்பூ விதை புளிப்பாகவும், மணமுள்ளதாகவும் இருக்கும். உடலுக்கு வலிமை தரும் சர்பத், பான வகைகளில் சங்குப்பூ சேர்க்கப்படுகின்றது.
சங்குப்பூ வெள்ளை நிறமான மலர்கள், நீல நிறமான மலர்கள் என இரண்டு வகைகள் பொதுவாக காணப்படும். மேலும் நீல நிறமான அடுக்கிதழ்களால் ஆன மலர்களைக் கொண்ட தாவரங்களும் உண்டு. வெள்ளை பூ பூக்கும் தாவரத்திற்கு மருத்துவ பயன் அதிகம் உள்ளது.
 
தேவையான அளவு சங்குப்பூ இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி பாதிக்கப்பட்ட இடத்தல் கட்ட வீக்கம் கட்டுப்படும்.
 
நெய்யில் வறுத்து இடித்து தயார் செய்த சங்கப்பூ விதைத் தூள், ஒரு சிட்டிகை அளவு வெந்நீருடன் உள்ளுக்குள் கொடுக்க குழந்தைகளுக்கு  ஏற்படும் இரைப்பு நோய் குணமாகும்.
 
யோனிப் புண்கள் குணமாக சங்குப்பூக்களை நீரில் கொதிக்க வைத்து, அந்த கொதிநீரால் பொறுக்கும் சூட்டில் புண்களைக் கழுவலாம். பால்வினை நோய், வெள்ளை படுதல் உள்ளவர்களுக்கு யோனியில் ஏற்படும் துர்நாற்றமும் கட்டுப்படும்.