வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 10 ஜூலை 2020 (11:48 IST)

கொரோனாவால் பலியான தங்கை… கடைசி முறையாக முகத்தை பார்த்த அண்ணணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

கொரோனாவால் பலியான இரு பெண்களின் உடல்கள் மாறியதால் உத்தர பிரதேசத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், பரேலியை சேர்ந்த அஞ்சூம் என்ற பெண்ணுக்கு மஞ்சள் காமாலை இருப்பதாக சொல்லி அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டார். ஆனால் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது பாசிட்டிவ் என முடிவு வந்துள்ளது. இதையடுத்து கொரோனா வார்டுக்கு மாற்றப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த அஞ்சூமுக்கு மூன்று குழந்தைகள். அவர் கணவர் ஏற்கனவே இறந்துவிட்டதால், அவரது உடலை சகோதரர் ஷெரிப் கானிடம் கொடுத்து அடக்கம் செய்ய சொல்லியுள்ளனர். கொரோனாவால் இறந்ததால் அஞ்சூமின் உடல் மூடப்பட்டு இருக்க, கடைசியாக ஒரு முறை அவரது முகத்தைப் பார்க்க, ஷெரிப் கான் அந்த பேக்கை திறந்துள்ளார். ஆனால் அவருக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக அந்த பேக்குக்குள் இருந்தது அவரது தங்கை இல்லை. இதை மருத்துவமனை ஊழியர்களிடம் அவர் சொல்ல ஊழியர்கள் தவறு நடந்துவிட்டதாகக் கூறி, அவர் தங்கை உடலை எடுத்துவருவதாக சொல்லியுள்ளனர்.

ஆனால் நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதனால் ஷெரிப் மருத்துவமனைக்கே சென்று கேட்க, அவரது தங்கை உடலை குசும்லதா என்ற பெண்னின் குடும்பத்தினரிடம் தவறாக வழங்கிவிட்டதாகவும், அவர்கள் பஞ்சாப் பாக் தகன மையத்துக்கு எடுத்து சென்று அந்த உடலை தகனம் செய்துவிட்டதாகவும் கூறியுள்ளனர். இது அவருக்கும் அவர் குடும்பத்துக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்த இது சம்மந்தமாக மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். இந்த குழப்பத்துக்கான காரணத்தைக் கண்டறிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.