புதன், 18 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 18 செப்டம்பர் 2024 (08:02 IST)

என்ன முடி இது..? ஒழுங்கா வெட்டிட்டு வா! திட்டிய பாட்டி! - சிறுவன் எடுத்த விபரீத முடிவு!

poison

சலூன் கடையில் முடிவெட்ட சென்ற சிறுவன் வைத்திருந்த ஹேர் ஸ்டைலை பார்த்து பாட்டி திட்டியதால் மனமுடைந்த சிறுவன் எடுத்த முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகேயுள்ள உள்ளட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடப்பன். இவர் மகன் கோவிந்தராஜ் அங்குள்ள உள்ளுகுறுக்கை அரசு மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 2 படித்து வருகிறார். நேற்று கோவிந்தராஜ் முடிவெட்ட சலூன் கடைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு பிடித்தபடி புதிய ஹேர்ஸ்டைலை வைத்ததாக தெரிகிறது.

 

கோவிந்தராஜ் வீடு திரும்பியபோது அவரது ஹேர் ஸ்டைலை பார்த்து கோபமடைந்த அவரது பாட்டி அனுமக்கா, கோவிந்தராஜை கடுமையாக திட்டியதுடன், மீண்டும் சலூனுக்கு போய் சரியாக முடியை திருத்தி வருமாறும், இல்லையென்றால் வீட்டிற்குள் வரக்கூடாது என்றும் கண்டித்துள்ளார்.
 

 

இதனால் மனமுடைந்த கோவிந்தராஜ் அப்பகுதியில் மல்லப்பன் என்பவருடைய இடத்தில் உள்ள புளிமரத்தின் கீழே அமர்ந்து விஷம் அருந்தியுள்ளார். கோவிந்தராஜை நீண்ட நேரமாக தேடியும் கிடைக்காத நிலையில் அவர் புளியமரத்தின் கீழே மயங்கி விழுந்து கிடப்பது தெரிந்து, அங்கே சென்று கோவிந்தராஜனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

 

முதலில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே கோவிந்தராஜ் சிகிச்சை பலனின்றி பலியானார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும், ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K