ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 24 ஜூலை 2020 (12:26 IST)

”கொரோனா ஒழிய வாங்குவீர் பாபிஜீ அப்பளம்!?” – கூவி விற்ற அமைச்சரை கலாய்த்த நெட்டிசன்ஸ்!

கொரோனாவை எதிர்த்து போராட பாபிஜி அப்பளம் சாப்பிடுங்கள் என மத்திய அமைச்சர் விளம்பரம் செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் கொரோனாவிற்கு எதிரான மருந்துகளை கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் கொரோனாவிற்கு எதிரான மருந்து கண்டுபிடிப்பதில் இந்தியா, இங்கிலாந்து மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் குறிப்பிட்ட முன்னேற்றத்தையும் அடைந்துள்ளன.

இந்நிலையில் அரசியல் பிரமுகர்கள் சிலர் கொரோனா ஒழிய பசுவின் கோமியம் பருகுதல் போன்ற ஆதாரமற்ற விஷயங்களை முன்மொழிவது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் மத்திய நீர் மூலாதாரம் மற்றும் நதிநீர் மேம்பாட்டு துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால். சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர் அதில் “ஆத்ம நிர்பார் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பாபிஜீ அப்பளம் கொரோனாவை எதிர்க்க வல்ல மூலப்பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனாவை எதிர்த்து போராட இந்த அப்பளம் நிச்சம் உதவும். இந்த முயற்சி வெற்றி பெற அனைவரையும் வாழ்த்துகிறேன்” என கூறியுள்ளார்.

சமூக வலைதளங்களில் இந்த வீடியோ ட்ரெண்டாகி உள்ள நிலையில் கொரோனா குறித்த தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என கூறிவிட்டு, அரசாங்க மந்திரியே இதுபோன்ற ஆதாரமற்ற செய்திகளை பரப்பலாமா என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் உள்ளூர் தயாரிப்பை ஊக்கப்படுத்தவே மந்திரி பாபிஜீ அப்பளத்திற்கு விளம்பரம் செய்தார் என மந்திரி தரப்பு ஆட்களும் பேசி வருகிறார்கள்.