திங்கள், 7 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 29 ஏப்ரல் 2014 (18:21 IST)

பாஜக - காங்கிரஸ் இடையே மறைமுக உடன்பாடு - கெஜ்ரிவால் குற்றச்சாற்று!

குஜராத்தில் இளம்பெண் வேவு பார்க்கப்பட்ட விவகாரம்; ராபர்ட் வதேரா நில பேர சர்ச்சையை எடுத்துக்காட்டி ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸும் பாஜகவும் மறைமுக உடன்பாடு செய்து கொண்டிருப்பதாக குற்றம்சாற்றினார்.

வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிடும் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது:-
 
"மோடி போட்டியிடும் தொகுதியில் சோனியாவும், சோனியா போட்டியிடும் தொகுதியில் மோடியும் பிரச்சாரம் மேற்கொள்ளாதது ஏன்? என்று கேள்வியெழுப்பினார். ராபர்ட் வதேரா நில பேர விவகாரத்தில் நரேந்திர மோடி தனது நிலைப்பாடு குறித்து விளக்க வேண்டும். உண்மையிலேயே இந்த விவகாரத்தில் பாஜகவுக்கு அக்கறை இருந்தால், ராஜஸ்தானில் ஆளும் பாஜக அரசு, வதேராவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யாதது ஏன்?
 
அதேபோல், இளம்பெண் வேவு பார்க்கப்பட்ட விவகாரம் மற்றும் அதானி விவகாரத்தில் பாஜகவுக்கு எதிராக கேள்வி எழுப்பி வரும் காங்கிரஸ், அது குறித்து சட்ட ரீதியிலான நடவடிக்கைகளில் இறங்காதது ஏன்? அதற்கான அழுத்தம் தராதது ஏன்?. பாஜகவும் காங்கிரஸும் பரஸ்பரம் குற்றஞ்சாற்றிக் கொள்கிறார்களே தவிர, எவ்வித நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை. இதிலிருந்தே அவர்கள் கைகோத்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. இரு கட்சிகளுக்கும் இடையே மறைமுக உடன்பாடு உள்ளது.
 
டெல்லியில் ஷீலா தீட்சித், முகேஷ் அம்பானிக்கு எதிராக என்னால் வழக்குத் தொடர முடிந்தது. அப்படியிருக்க, கடந்த 4 மாதங்களாக வதேராவுக்கு எதிராக ராஜஸ்தானின் பாஜக அரசால் வழக்குப் பதிவு செய்ய முடியாதது ஏன்? என்று கெஜ்ரிவால் கேள்வி எழுப்பினார்.
 
வாரணாசியில் குண்டர்கள் மூலம் மக்களையும், ஆம் ஆத்மி தொண்டர்களையும் அச்சுறுத்தும் முயற்சிகள் நடக்கின்றன" என்றும் அவர் குற்றஞ்சாற்றினார்.