1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 19 மார்ச் 2024 (10:26 IST)

பணம் திருடியதாக மாணவியின் உடைகளை அவிழ்த்த ஆசிரியை! – விரக்தியில் மாணவி எடுத்த சோக முடிவு!

பணத்தை திருடியதாக மாணவி மீது சந்தேகப்பட்ட ஆசிரியை மாணவியின் உடைகளை கழற்றி சோதனை செய்ததால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கர்நாடகாவின் பாகல்கோட் அருகே உள்ள கடம்பூரில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில் கன்னட ஆசிரியையாக பணியாற்றி வருபவர் ஜெயஸ்ரீ. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஜெய்ஸ்ரீயின் பையில் வைத்திருந்த ரூ.2 ஆயிரம் காணாமல் போயுள்ளது.

இதுகுறித்து சில மாணவிகள் மீது ஆசிரியைக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் சில 10ம் வகுப்பு மாணவிகள் மற்றும் 8ம் வகுப்பில் படித்து வந்த சிறுமி திவ்யாவையும் அழைத்து ஆசிரியை, தலைமை ஆசிரியை விசாரித்துள்ளனர். மாணவிகளது உடைகளை அவிழ்க்க சொல்லி அவர்கள் சோதனை செய்தும் உள்ளனர். மேலும் திவ்யாவை ஒரு கோவிலுக்கு கூட்டி சென்று பணத்தை திருடவில்லை என சத்தியம் செய்யும்படியும் கேட்டுள்ளனர்.


ஆசிரியர்களின் இந்த செயலால் மனமுடைந்த திவ்யா நேற்று முன் தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். சிறுமி திடீரென தற்கொலை செய்து கொண்டது குறித்து சிறுமியின் பெற்றோர் ஒன்றும் புரியாமல் அதிர்ச்சியில் உறைந்த நிலையில், சக மாணவிகள் பள்ளியில் நடந்ததை திவ்யாவின் பெற்றோரிடம் கூறியுள்ளனர்.

இதுகுறித்து திவ்யாவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் சம்பந்தப்பட்ட ஆசிரியை ஜெயஸ்ரீ, தலைமை ஆசிரியர் ஆகியோரை விசாரித்து வருகின்றனர்.

Edit by Prasanth.K