1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 17 மே 2024 (11:38 IST)

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

Stray Dogs Issue
சமீப காலமாக நாய்கள் மனிதர்களை கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் தெரு நாய்களுக்கு உணவு வைத்த பெண்ணை ஆசாமி ஒருவர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



சமீப காலமாக பல பகுதிகளிலும் வளர்ப்பு நாய்கள் சிலரை கடித்ததால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சம்பவங்கள் தொடர் கதையாக நடந்து வருகின்றன. இதனால் வளர்ப்பு நாய் வைத்திருப்பவர்களை பதிலுக்கு தாக்கும் சம்பவம் சமீப காலமாக அதிகரித்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் வீட்டு வாசலில் வளர்ப்பு நாயோடு நின்ற நபரை கும்பல் ஒன்று மூர்க்கமாக தாக்கிய சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தெருநாய்களுக்கு உணவு வைத்ததற்காக இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் ரகுபீர் நகரை சேர்ந்த மனிஷா சோலங்கி என்ற இளம்பெண் அப்பகுதியில் உள்ள தெரு நாய்களுக்கு நாள்தோறும் உணவு அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

கடந்த 14ம் தேதியன்று வழக்கம்போல சுமார் 100க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு அவர் உணவளித்துக் கொண்டிருந்தபோது அருகில் உள்ள கடையை சேர்ந்த நபர் ஒருவர் கோபமாக வந்து மனிஷாவையும், நாய்களையும் தாக்கியுள்ளார். இதை அருகே இருந்தவர்கள் படம் பிடித்த நிலையில் அது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் தான் தாக்கப்பட்டது குறித்து வீடியோ வெளியிட்ட மனிஷா, ஆதரவற்ற விலங்குகளுக்கு எதிரான செயல்களையும், அதை தட்டிக் கேட்டதால் தான் தாக்கப்பட்டது குறித்தும் வேதனையுடன் பேசியுள்ளார். மேலும் அந்த சமயத்தில் தங்களுக்கு யாரும் உதவ முன்வரவில்லை என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் மனிஷாவை தாக்கிய சோனு என்ற நபரை போலீஸார் பிடித்துள்ளனர். அப்பகுதியில் சுற்றி திரியும் நாய்களால் தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவதாகவும், அதனால் கோபத்தில் அவர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K