1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 14 ஆகஸ்ட் 2022 (09:09 IST)

சீன உளவு கப்பலுக்கு இலங்கை அனுமதி – பதற்றத்தில் இந்தியா!

இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீன உளவுக் கப்பல் அம்பந்தொட்ட துறைமுகத்திற்கு வர இலங்கை நேற்று அனுமதி.


சீன அரசு இலங்கைக்கு கடன் கொடுத்தற்காக அம்பந்தோட்டா துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துள்ளது. இதனை பயன்படுத்தி சீனா, தனது 'யுவான் வாங் 5' என்ற ஆராய்சி கப்பலை அம்பந்தோட்டா துறைமுகத்தில், 6 நாட்கள் நிறுத்தி செயற்கைக்கோள் தொடர்பான ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக அறிவித்தது.

சீனாவின் உளவு கப்பலான யுவான் வாங்க் 5 என்ற கப்பல் கடந்த 11 ஆம் தேதியன்று இலங்கை அம்பந்தொட்டை துறைமுகத்திற்கு வர உள்ளதாகவும், எரிபொருள் நிரப்புவதற்காக 17 ஆம் தேதி வரை அங்கு நிறுத்தி வைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால் சீன உளவு கப்பலின் இந்த வருகை இந்தியாவை உளவு பார்க்கும் நோக்கில் இருக்கலாம் என இந்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியாவின் எதிர்ப்பை தொடர்ந்து சீன உளவுக் கப்பலை இலங்கை எல்லைக்குள் அனுமதிக்கவில்லை என்றும் அந்த கப்பல் சர்வதேச கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் இலங்கை அரசு தெரிவித்தது.

நேற்று வரை இலங்கை அரசு அனுமதி தராததால், சீன உளவு கப்பல் அம்பந்தொட்ட துறைமுகத்தில் இருந்து 600 நாட்டிகல் மைல் தொலைவில் கடலில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீன உளவுக் கப்பல் அம்பந்தொட்ட துறைமுகத்திற்கு வர இலங்கை நேற்று அனுமதி தந்தது.

எனவே சீன உளவு கப்பல் வரும் 16 ஆம் தேதி அம்பந்தொட்ட துறைமுகத்திற்கு வந்தடையும். பின்னர் எதிர் வரும் 22 ஆம் தேதி வரை கப்பல் அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இந்தியாவின் தென் மாநில துறைமுகங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.