1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 21 ஏப்ரல் 2019 (08:16 IST)

ஸ்டெப்னி டயருக்குள் கட்டுக்கட்டாக பணம்: எப்படியெல்லாம் யோசிக்குறாங்க!

இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில் ஏற்கனவே இரண்டுகட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துவிட்டது. இந்த நிலையில் மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ள கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்றுடன் தேர்தல் பரப்புரை முடிவடைகிறது
 
இந்த நிலையில் ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாள் பணப்பட்டுவாடா அதிகம் இருக்கும் என்பதால் 3ஆம் கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனை செய்து வருகின்றனர். இதனையடுத்து கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமோகா என்ற பகுதியில் கார் ஒன்றில் அதிக பணம் கடத்தப்படுவதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல்கள் கிடைத்தது.
 
எனவே அந்த குறிப்பிட்ட காரை அதிகாரிகள் நிறுத்தி தீவிர சோதனை செய்தனர். கார் முழுவதும் சல்லடை போட்டு தேடியும் பணம் எங்குமே இல்லாததால் அதிகாரிகள் குழப்பம் அடைந்தனர். ஆனால் அதே நேரத்தில் நம்பத்தகுந்த இடத்தில் இருந்து தகவல் கிடைத்ததால் மேலும் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது அதிகாரிகளின் கண்ணில் கார் ஸ்டெப்னி டயர் தெரிந்தது. அந்த டயரை சோதனை செய்தபோது டயரின் உள்ளே கட்டுக்கட்டாக ரூ.2000 நோட்டு அடுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. டயருக்குள் இருந்த பணத்தின் மொத்த மதிப்பு இரண்டு கோடியே முப்பது லட்சம் ஆகும்,. இதனையடுத்து காரில் பணத்தை எடுத்து சென்றவர்களை அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.